ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது? - என் மன வானில்

ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது? - என் மன வானில்
Updated on
2 min read

ஆண்டு 2012. எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் சமுத்திரம். துறுதுறு வென்று இருப்பான். பெரிய மனிதர்களைப்போலத்தான் பேச்சும் நடத்தையும்.

ஏன் நடையும் கூட இருக்கும். ஆய்வு செய்யும் அதிகாரிகள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு எல்லாப்பக்கமும் கண்களைச் சுழற்றியபடி எங்கேயோ பார்த்து, எதையாவது கேட்பார்களே - அப்படித்தான் அவனது பார்வையும் கேள்வியும் இருக்கும்.

பள்ளிக்கு முதல் மாணவனாக வந்து, கடைசி மாணவனாக வெளியேறுவான். சத்துணவு சாப்பிடுகையில் உணவையோ, முட்டையையோ வீணடிக்கும் சக மாணவர்களைக் கடிந்துகொள்வான்.

ஒரு முறை, ஏழெட்டு நாள் விடுமுறைக்குப் பின்பு பள்ளி திறக்கப்பட்டபோது பிளஸ் 1 வகுப்பில் மாணவிகள் தங்கள் வகுப்பைச்சுத்தம் செய்கையில் டெஸ்க்கின் அடியில் பாம்பு ஒன்றைப் பார்த்து அலறி அடித்து வெளியே வந்தனர்.

மாணவர்களும் தங்கள்

பங்குக்கு நாலாபுறமும் சிதறி ஓடினர், கத்திக்கொண்டே... கத்துவது முக்கிய மில்லையா. சமுத்திரம் எட்டாம் வகுப்பி லிருந்து வெளியே வந்தவன், வழக்கம்போல கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டே வந்து “என்ன சார் பிரச்சினை” என்றான் என்னிடம். “ஏதோ பாம்பு கெடக்குதாம்ப்பா கம்ப எடுத்தா அடிச்சுத் தூக்கிப் போடுவோம்” என்றேன்.

“இருங்க சார்! என்ன பாம்புன்னு பாப்போம்”, என்றவன், அண்ணே... அக்கா தள்ளிக்கங்க என்றவாறு அவர்களை விலக்கிக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தான். எனக்கு உதறலெடுத்தது. ஏதோ பயப்படாதது போலக் காட்டிக்கொண்டு, “போங்கப்பாபோய் அந்த மரத்தடியில நில்லுங்கப்பா... பாம்ப அடிச்சுப்புட்டு கூப்புடுறோம்” என்றேன் மாணவர்களிடம்.

ஒரு பாம்பை அடிக்க இத்தன பேரா என்று வலது கையை நெளித்துக்கேலி செய்துவிட்டு டெஸ்க்குகளை ஆராய்ந்தான், சமுத்திரம். ஐந்து விநாடிகள்தான் வெளியே வந்தான். “கொமரன் பாம்பு சார், ஒண்ணும் செய்யாது” என்றான். நான் கம்பை நீட்டியவாறே வகுப்புக்குள் நுழைந்தேன். “சார்... சார்... அடிச்சிராதீங்க இது வயப் பாம்பு.

விஷமில்லாத பாம்பு சார். எலியைப் பூராம் புடிச்சுத் திங்கிற பாம்பு, அடிக்கப் பிடாது” என்றான். “வேற என்னடா செய்யிறது சமுத்திரம்” என்றேன். “இருங்க சார்.. பதவிசா புடிச்சுப்புடுறேன்” என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “டேய்... விளையாடாதடா... கொத்திப் புடுச்சுன்னா என்னடா பண்றது” என்று பதறினேன்.

கறைப் பற்களும், குறை ஈறுகளும் தெரிய பளீரென்று சிரித்தான். “சார், சத்தியமா ஒண்ணும் செய்யாது... கடிச்சாலும் விஷமில்ல... பயப்படாதீங்க” என்று சொன்னவாறே குனிந்து அந்தப் பாம்பை கையில் பிடித்துவிட்டான். சின்னப் பாம்புதான். ஆனால், சீறுசீறுவென்று சீறியது. தலையில் தட்டினான். “பேசாம இருக்கமாட்ட... சார்...பயப்படுறாருல்ல...” என்றான்.

வெளியே நின்றிருந்த பெரிய மாணவர்கள், “டேய்... சமுத்திரம் அதைத் தூக்கிக் காட்டுடா” என்றார்கள். “அண்ணே... இது என்ன விளை யாட்டுப் பொருளாண்ணே... நம்மள மாதிரி ஒரு உசிருண்ணே... போங்கண்ணே” என்று சொல்லிவிட்டு காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து வயற்காட்டிற்குள் விட்டுவிட்டு வந்தான்.

அந்த சமுத்திரத்தைப் பற்றி ஆசிரியர்கள் நித்தம் ஒரு குறை சொல்வார்கள். நான் அவனுக்கு வகுப்பு எடுக்கவில்லை என்றாலும் பள்ளியின் முரட்டு வாத்தியார் என்றும் கோபக்கார வாத்தியார் என்றும் பெயரெடுத்து வைத்திருந்ததால், என்னிடம் பலப்பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கும்.

வீட்டுப்பாடம் எழுதுவதில்லை. படிப்ப தில்லை. கேள்விகள் கேட்டால் சொல்வதில்லை - இப்படி பல குற்றச்சாட்டுகள். அப்படி அன்றும் ஒரு குற்றச்சாட்டைச் சொன்ன சக ஆசிரியர் வகுப்பு லீடரோடு சமுத்திரத்தையும் அனுப்பி வைத்திருந்தார். லீடர் வந்து ஆசிரியர் சொல்லச் சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னான்.

நாலு அடி போடுவீங்களாம் சார் என்று சொல்லி விட்டு ப்ளக்கென்று சிரித்துக்கொண்டே போனான். சமுத்திரம் வழக்கம்போல கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஃபேன் சுழல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அட்டெண்டன்ஸ் நோட்டில் பென்சிலால் எழுதுவதுபோல பாவனை செய்து கொண்டிருந்தேன்.

கோபமாக இருக்கிறேனாம். மறுபடி அவனைப் பார்த்தபோது பெரிய ஓணான் ஒன்று எனக்குப் பக்கவாட்டு மரத்தில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். செருமினேன். “என்னா சமுத்திரம்... சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்குறியாம்... ஹோம் ஓர்க் கெல்லாம் பண்ண மாட்றியாம்... என்னா விஷயம்” என்றேன், கண்களை உருட்டி, பெரு மூச்செடுத்து, சட்டையை மடித்து விட்டபடி.

அவன் கொஞ்சமும் அசரவில்லை. என்னை நேருக்கு நேராகப் பார்த்தான். சின்னச் சின்ன கண்கள். பெரிய பெரிய பார்வைகள். செருமிக்கொண்டான். நெருங்கிவந்து என் மேசை மீது இரண்டு கைகளையும் ஊன்றியபடி சொன்னான், சார்... எனக்கு படிப்பு வரலேங்கிறது “எனக்குப் புரிஞ்சுருச்சு... டீச்சர்ங்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது?”

- கட்டுரையாளர்: சுரேஷ் காத்தான், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கோசுகுறிச்சி - நத்தம், திண்டுக்கல்.

ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது? - என் மன வானில்
அழகை இழந்துவரும் எழுத்துகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in