Published : 24 Jan 2023 06:15 AM
Last Updated : 24 Jan 2023 06:15 AM

குடியரசு தினம் வந்தது எப்படி தெரியுமா?

அருணா ஹரி

"எவ்வழி நல்லவர், ஆடவர்; அவ்வழி

வாழிய நிலனே"

அரசன் நல்லவனாக அமைந்தால் அந்நாடே நல்ல நாடாக திகழும். நல்லதலைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இருந்தால், அதைவிட சிறப்பு வேறு என்ன இருக்க முடியும்?

மக்களாட்சி என்றால் என்ன?

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் நடத்தப்படுவதே மக்களாட்சி ஆகும்.அதாவது மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு குடியரசு எனப்படுகிறது. நாம் எப்போது குடியரசு ஆனோம் தெரியுமா?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 29-ல் அரசியல் அமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 7 உறுப்பினர்கள் இருந்தனர். டாக்டர் அம்பேத்கர், என்.கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கே.எம்.முன்ஷி, சையத் முகமது சாதுல்லா, என்.மாதவ்ராவ், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வரைவுக்குழுவில் இருந்தனர். இக்குழுவிற்கு அம்பேத்கர் தலைமையேற்றார்.

இந்த குழு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. அந்த அரசியலமைப்பு, திட்டமிடப்பட்ட கூட்டங்களில் 114 நாட்கள் கலந்துரையாடப்பட்டது. 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பல நாடுகளின் சிறப்பு

பல நாடுகளில் இருக்கும் சிறப்பு அம்சங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டது நம் அரசியலமைப்புச் சட்டமாகும். 1929-ம் ஆண்டு டிசம்பர் லாகூர் மாநாட்டில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே விடுதலை நாளை 1930-ல் இருந்து ஜன.26 கொண்டாடுவதாக தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. விடுதலைக்குப் பின்னர் அரசியலமைப்புச் சட்டம் உருவான பிறகு அது 1950-ம்ஆண்டு ஜன.26-ம் தேதி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு நாளாகும். ஆம். 1950-ல் ஜன.26-ம் தேதி சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக அது மலர்ந்தது. குடியரசு தினத்தன்று முப்படை அணிவகுப்பு நடைபெறும். குடியரசுத் தலைவர் தேசியக் கொடியேற்றுவார்.

நாம் எல்லோரும் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர்கள். நமக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நம்மிடையே இருக்கிறது. மிட்டாய் சாப்பிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளித்து ஓய்வெடுக்கும் விடுமுறை நாளாக குடியரசு தினத்தை நினைக்காமல் அதன் சிறப்பை உணர்ந்து நல்ல குடிமகனாக நாட்டிற்கு நலமும், வளமும் சேர்க்க உறுதிபூண்டு பாடுபட வேண்டும்.

கட்டுரையாளர்

எழுத்தாளர், பள்ளி முதல்வர்,

நவபாரத் வித்யாலயா,

இ.வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x