Published : 28 Jul 2022 06:12 AM
Last Updated : 28 Jul 2022 06:12 AM

சிறுகதை: யாருக்கு அறை சொந்தம்? :

கி.அமுதா செல்வி

புகழ்மதிக்கு புது வீடு மிகவும் பிடித்திருந்தது. புது வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.

பழைய வீட்டை விட புது வீடு அளவில் கொஞ்சம் பெரியது. "இது என்னோட அறை. இங்க உட்கார்ந்து தான் வீட்டுப்பாடம் எழுதுவேன். இந்த இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடுவேன். இந்த அலமாரியில் என்னோட புத்தகங்களை அடுக்கி வைப்பேன். யாரும் அதைத் தொடக் கூடாது” என்று சொல்வார்.

புகழ்மதிக்கு ரொம்பப் பிடித்த இடம் அந்த வீட்டில் இருந்த அந்தக் குட்டி அறைதான். அது அவளோட வீடாம். ஒரு பாய் தலையணை, பொம்மைகள், புத்தகம், தண்ணீர் இப்படி அவளுக்குன்னு ஒரு சின்ன உலகம் அந்தக் குட்டி அறைக்குள்ளே இருந்தது.

கொஞ்ச நாள்தான் இந்த அதி காரம். எல்லாம், ஆச்சி வீட்டிற்குப் போன தம்பி வரும் வரைதான்.

கபிலன் புகழ்மதியின் தம்பி. கோடை விடுமுறைக்காக ஆச்சி வீட்டிற்குச் சென்றுள்ளான்.

ஆண் பிள்ளை என்பதற்காக அவனுக்கு கூடுதல் செல்லம். எல்லாம் அப்பத்தாவோட வேலைதான். அவன் என்ன கேட்டாலும் உடனே செய்து தருவார்.

"புகழ்மதிக்கு அப்பத்தா மேல கோபம் கோபமாய் வரும். நீயும் பொண்ணு தானே. நீ எனக்கு தானே சப்போர்ட் பண்ணனும்" என்பாள் புகழ்.

"என்ன இருந்தாலும் நீ அடுத்த வீட்டுக்கு போற பிள்ளை. இவன் தான் கடைசி வரை எங்களுக்கு சோறு போடுறவன்" என்பாள் அப்பத்தா.

அப்பத்தாவை பொறுத்தமட்டில் தம்பி சொல்வதுதான் சட்டம். ஆனால், அவன் சட்டமெல்லாம் அப்பாக்கிட்ட செல்லுபடியாகாது.

விடுமுறை முடிந்து வீடு வந்து சேர்ந்தான் கபிலன். அந்தக் குட்டி அறைக்குள் போனான். "வீடு கட்டும் போதே சொன்னேன் தானே! இது என்னோட அறைன்னு. இந்த அறை எனக்கு தான் சொந்தம்".

ஆத்திரத்தில் கத்தினான். புகழ்மதியின் பொம்மை, புத்தகம் ஒவ் வொன்றாக தூக்கி வீசினான்.

அவனுடைய பொருட்களை அலமாரியில் அடுக்கி வைத்தான்.

விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்த புகழ்மதிக்கு ஒரே கோபம். நேரா கபிலனிடம் போய் சண்டை போட்டாள். அவன் அசையவில்லை. கோபம் அதிகமானதும் அழுகை வந்துவிட்டது.

அப்போது அங்கு வந்த அம்மா "நம்ம தம்பி தானே கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ பாப்பா" என்றாள்.

"ஏன்? எப்போ பார்த்தாலும் நான்மட்டும் தான் விட்டுக் கொடுக்க ணுமா?. நான் தானே பெரியவள். எனக்காக அவனை விட்டுக் கொடுக்க சொல்லுங்கள்" என்றாள் புகழ்மதி. சண்டை ஓய்ந்தபாடில்லை.

"என்ன அங்கே சண்டை"? என்றவாறே உள்ளே வந்தார் அப்பா. அப்பாவை பார்த்ததும் புகழ்மதி அழுது கொண்டே பேசினாள். "என் தங்க பிள்ளைங்க இதுக்கு போய் சண்டை போடுவீங்களா?” என்று சிரித்தார்.

கபிலனைப் பார்த்து, “தம்பி....புகழ்மதி உன்னோட அக்கா. அவளுக்கு தேவையானதை நீ தானே செய்யணும்.

உனக்கு வேண்டியதை அக்கா தானே செய்யணும். இந்த சின்ன விஷயத்துக்கு போய் அக்காகிட்ட சண்டை போடுவது சரியா சொல்லு?

இப்போ என்ன இந்த அறை தானே பிரச்சினை. இரண்டு பேரும் அதைப் பயன்படுத்துங்க’’ என்று கபிலனுக்கு புரியவைத்தார் அப்பா.

கபிலன் புகழ்மதியின் அருகில் வந்தான். புகழ்மதி புன்னகை செய்தாள். சிதறிக் கிடந்த பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கினான் கபிலன்.

புகழ்மதி அப்பாவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள். அந்த பிடியில் இருந்த நம்பிக்கையை அப்பா உணர்ந்தார். அவளும் உணர்ந்தாள்.

கட்டுரையாளர்: ஆசிரியை,அரசு மேல்நிலைப் பள்ளி, குலமங்கலம், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x