Last Updated : 10 Nov, 2023 04:30 AM

 

Published : 10 Nov 2023 04:30 AM
Last Updated : 10 Nov 2023 04:30 AM

தீபாவளி பட்டாசு வெடிக்க வேண்டுமா?

தீபாவளி என்றாலே தித்திக்கும் தின்பண்டங்கள், புத்தாடைக்கு முன்னால் நினைவுக்கு வருவது பட்டாசு தான். பட்டாசு 2200 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டது. பட்டாசை கண்டுபிடித்தது சீனர்கள். சமையலுக்கு பயன்படுத்திய உப்பில் பொட்டாசியம் நைட்ரேட் அதிகமாய் இருந்தது. அது தற்செயலாய் தவறி நெருப்பில் விழுந்தது. அதிலிருந்து மத்தாப்பு பொறிகள் கிளம்பின.

இந்த வினைதான் பட்டாசு உருவான காரணம் ஆகும். மூங்கில் குருத்துக்குள் அந்த உப்பை நிரப்பி பற்ற வைத்தபோது காதைப் பிளக்கும் சத்தத்துடன் வெடித்தது. பிறகு கரியும், கந்தகத்தூளும் கலந்த கலவை வெடிக்கும் என அறிந்து பயன்படுத்தினர். பட்டாசு சத்தத்தால் தீயவை அகலும் என சீனர்கள் நம்பினர்.

சீனக்குறிப்புகளில் ஏழாம்நூற்றாண்டிலேயே பட்டாசு தயாரிக்கும் நுட்பங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பட்டாசில் சீனப் பட்டாசு, பசுமைப் பட்டாசு, நாட்டு வெடி என வகைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசு உருவாகும் என்ற காரணத்திற்காக உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பசுமை பட்டாசு என்றால் என்ன? - பச்சை நிறமாக எரிவது பசுமை பட்டாசு அல்ல. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தினால் தான் பச்சை நிறம் வரும். பேரியம் நைட்ரேட் தடை செய்யப்பட்ட பொருள் ஆகும்.தற்போது பட்டாசுகளில் பயன்படுத் தப்படும் பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் பட்டாசுகளே பசுமை பட்டாசுகளாகும். இதில், நீலம், சிவப்பு, மஞ்சள் வண்ண மத்தாப்புகள் சிதறும்.

இதில், மாசு 30 சதவீதம் குறைவாக உள்ளது. பசுமைப் பட்டாசு லோகோவுடன் வெளிவருகிறது. ஒலியும் குறைவாகவே இருக்கும். அரசு அனுமதி தரும் ஒலி அளவு 126 டெசிபல். அதிக அளவுள்ள ஒலியைக் கேட்கும் போது செவித்திறன் பாதிக்கப்படுகிறது. 85 டெசிபல் சத்தத்திற்கு மேலுள்ள சத்தம் கேட்கும் தன்மை பாதிக்கும். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) நீரி-யின் கண்டுபிடிப்பு பசுமை பட்டாசாகும். பசுமை பட்டாசில் நான்கு வகைகள் உள்ளன.

தண்ணீரை உருவாக்கும் பட்டாசு (வாட்டர் ரிலீசர்) இது வெடித்ததும் உருவாகும் தண்ணீரில் சல்பர், நைட்ரஜன் கரைந்துவிடும். கந்தகம், நைட்ரஜனை குறைவாக வெளியிடும் பட்டாசு STAR பசுமை பட்டாசு (Safe thermite Cracker). இந்த வகை பட்டாசில் ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் கொண்ட (Oxidizing Agent) பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

அலுமினியம் குறைவாக பயன்படுத் தப்படும் பட்டாசுகள். 50-60 சதவீதம் குறைவாக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. அரோமா வகை பட்டாசுகளை வெடிக்கும் போது தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் குறைவாக வெளியாவதுடன் நறு மணமும் வெளியாகும்.

பலநிற ஒளிகளில் வெடிக்கும் பட்டாசுகளில் பல வேதிப் பொருள்கள் வெளியாகின்றன. வெள்ளையில் அலுமினியம், மக்னீசியம், டைட்டானியம், ஆரஞ்சு நிற ஒளியில் கார்பன், இரும்பு, மஞ்சள் நிற ஒளியில் சோடியம், நீலம் சிவப்பில்- தாமிரம், ஸ்ட்ரோண்டியம் கார்பனேட்டுகள், பச்சை நிற ஒளியில் பேரியம் நைட்ரேட் உள்ளது.

பட்டாசால் உருவாகும் ஈயம் நரம்பு மண்டலத்தை தாக்கும், தாமிரம் சுவாசக்குழாயில் எரிச்சல் ஏற்படுத்தும், சோடியம் தோல் பிரச்சினையை உண்டாக்கும். மெக்னீசியம் புகையால் காய்ச்சல் வரும். காட்மியம் ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பை உருவாக்கும். நைட்ரேட் மனநல பாதிப்பிற்கு காரணமாகும். பசுமைப் பட்டாசை வெடிக்கும் போதும் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், பாதரசம் வேதித்துகள் வெளியாகின்றன.

காசை கரியாக்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, கவனக்குறைவால் ஆபத்தை உருவாக்கி பட்டாசை வெடிக்க வேண்டுமா? சிறிய மகிழ்ச்சிக்காக காற்றை, நிலத்தை, நீரை (அசுத்தமாக்க) மாசுப்படுத்த வேண்டுமா? சற்றே சிந்தியுங்கள்.

- கட்டுரையாளர் பள்ளி முதல்வர் நவபாரத் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி இ.வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x