Last Updated : 05 Sep, 2023 04:34 AM

 

Published : 05 Sep 2023 04:34 AM
Last Updated : 05 Sep 2023 04:34 AM

ஆசிரியர் தினம் 2023 | ஆசானால் எளிதில் கைவசமான அந்நியமொழி

எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம், புளியங்குடி. எனது தாய், தந்தை இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். ஆசிரியர் குடும்பம் என்பதால் மற்றவர்களைப் போல எனக்கும் ஆசிரியர் பணி ஆரம்பத்தில் பிடிக்கவில்லைதான். ஆனால் அம்மா வீட்டையும் கவனித்துக் கொண்டு எங்களையும் வளர்த்து ஆளாக்கி தனது ஆசிரியர் பணியையும் சிறப்பாக செய்ததை அருகில் இருந்து பார்த்ததால்தான் ஒரு பெண்ணுக்கு ஆசிரியர் பணி சிறந்த அறப்பணி என்பதை உணர்ந்தேன். எனது விருப்பத்திற்கு குடும்பத்தினரும் ஊக்கம் அளித்தனர்.

எனக்கு பள்ளிக்கூடங்களிலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நன்னாளில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். எனது ஆங்கில ஆசிரியர் கமால் மொகைதீன், தனது அணுகுமுறையாலும், பாடம் நடத்திய பாங்கிலும் தனித்துக் காணப்பட்டார்.

புளியங்குடி அரசு உதவி பெறும் ஆண்டியப்பா நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தபோது மற்றவர்களைப் போலஎனக்கும் ஆங்கிலமும், கணிதமும் வேப்பங்காய் போலத்தான் கசந்தன. அப்போதுதான் வாராது வந்த மாமணி போல வந்தார் ஆங்கில ஆசிரியர் கமால். அவர் முதன்முதலாக வகுப்புக்கு வந்தபோது மற்ற ஆங்கில ஆசிரியர்களைப் போலத்தான் பார்த்தோம். நான் மட்டுமல்ல மற்ற மாணவர்களும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

முதல்நாளில் வந்ததும் அவர் பாடம் நடத்தாமல் எங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரது அணுகுமுறை ஆசிரியரைப் போல அல்லாமல் நண்பரைப்போல தென்பட்டது. 80, 90-களில் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கண்டிப்பானவர்களாகத்தான் இருந்தனர். அவர்களில் மத்தியில் கமால் மொகைதீன் சற்று வித்தியாசமாக காணப்பட்டார். முதல் நாள் அப்படித்தான் இருப்பார் போகப்போகத்தான் தெரியும்என்றனர் சகமாணவர்கள். நானும்அப்படித்தான் எண்ணினேன்.

அவரிடம் பாடம் கற்றபோது வெறுமனே பாடத்தையும் நான் கற்கவில்லை. எப்போதும் சிரித்த முகம், கருணை, அன்பு கலந்த கண்டிப்பு, பாடம் நடத்துகையில் உடல் அசைவு என ஒரு ஆசானுக்கு உரிய அத்தனை பண்புகளையும், நற்குணங்களையும் கண்கூடாகக் கண்டேன். அவரது நுனிநாக்கில் ஆங்கிலம் அற்புதமாகவும், ஸ்டைலாகவும் வந்துபோகும். ஆங்கில ஆசிரியர் என்ற தலைக்கணமோ, கெத்தோ இருந்ததில்லை.

ஆங்கில இலக்கணம் என்றாலே அலர்ஜி. அதைக்கூட அவ்வளவு எளிமையாக சொல்லித் தந்து அசத்தினார். பாடம் நடத்தி முடித்து அதுகுறித்து எங்களிடம் "பீட்பேக்" வாங்கி அதற்கேற்ப பாடம் நடத்துவது அவரது தனிச்சிறப்பு. ஆங்கில வார்த்தைக்களுக்கான அர்த்தத்தை ஆங்கில அகராதியைப் பார்த்து தெரிந்து கொள்ளச் செய்தார். மகிழ்ச்சியுடன் கல்வி கற்றலை அவர் அப்போதே அறிமுகம் செய்துவிட்டார்.

நாள்தோறும் 2 வினைச்சொற்களைப் பயன்படுத்தி கடினமின்றி களிப்புடன் விளையாட்டாக செயல்கள் மூலம் எங்களையே கற்கச் செய்தது மறக்க முடியாத அனுபவம். இப்படி பலவற்றைச் சொல்லலாம். இவ்வாறு ஆங்கிலப் பாடத்தை எளிமையாக புரியும்படி சொல்லிக் கொடுத்ததால் இன்று ஓரளவுக்காவது எனக்கு ஆங்கிலப் புலமை இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தத் தந்தது கமால் மொகைதீன் சார்தான். நேரம் தவறாமை என பல நற்குணங்கள் கொண்ட அவர் ஆசிரியர்களுக்கு எப்போதும் முன்உதாரணம். அதனால்தான் அவர் இன்றளவும் எனது மனதில் அணையாவிளக்காக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு (32 ஆண்டுகள்) 2015-ம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அருகேஎனது ஆசானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பார்த்ததும் அப்படியொரு பூரிப்பு. எம்.பி.பி.எஸ். முடித்துள்ள எனதுமகள் கனகாவை ஆசானுக்கு அறிமுகப்படுத்தினேன். அந்த தள்ளாத வயதிலும் அவர்எங்களுடன் அற்புதமாக ஆங்கிலத்தில் உரையாடியதைக் கேட்டு மகள் அசந்துபோனாள். தற்போது 84 வயதை எட்டியுள்ள எனது ஆசானின் அடியொற்றி மாணவ, மாணவியருக்கு கற்பித்தல் பணியைத் தொடர்கிறேன்.

- கட்டுரையாளர்: இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முத்துநாகையாபுரம், சேடபட்டி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x