

நகர நெரிசலில் கான்கிரீட் கோபுரங்களில் குளிர்பதனச் சிறைகளில் அரைத்த மாவையே அரைப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? இயற்கையின் நுரையீரல்களான மாசுபடாத காடுகளில் உங்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அடர்ந்த காட்டிலும் அது தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும் ஆராய்ச்சி செய்வது சாகசமானது கூடவே சுவாரசியமுமானது.
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம், தேசிய அளவில் காடுகள் சார்ந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்க முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது. 1876-ல் டேராடூனில் தொடங்கப்பட்ட வனப்பள்ளி (Forest School) தான் இந்தியாவில் வன அறிவியல் துறைக்கான தொடக்கப்புள்ளி. இதன் வளர்ச்சியாக 1986-ல், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் (Indian Council of Forestry Research and Education – ICFRE) ஆரம்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கிவருகிறது இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம்.
டேராடூனில் உள்ள வன ஆய்வு நிறுவனத்தோடு ஒன்பது பிராந்திய ஆய்வு நிலையங்கள் காடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றன. ஜோத்பூர், சிம்லா, ஹைதராபாத், கோயம்புத்தூர், ராஞ்சி, பெங்களூரு, ஜோரட், ஜபல்பூர் ஆகிய இடங்களில் ஆய்வு நிலையங்கள் உள்ளன. கோயம்புத்தூரில் உள்ள, காட்டு மரபியல் மற்றும் மரவிருத்தி நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding-IFGTB) இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று.
என்னென்ன ஆய்வுகள்? - காடு வளர்ப்பு, காட்டு பாதுகாப்பு, காலநிலை மாற்றம், காட்டு பொருட்கள் மேம்பாடு, காட்டு விவசாயம், நோய்-பூச்சி தடுப்பு உட்பட பல ஆய்வுகள் இங்கு நிகழ்கின்றன. இமய மலைக் காடுகள், வெப்ப மண்டலக் காடுகள், வறண்ட நிலக் காடுகள், மழைக் காடுகள் என ஆராய்ச்சிகள் பல வனப்பகுதிகளில் விரிகின்றன.
எந்தெந்தப் பாடப்பிரிவுகள்? - பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் மற்றும் கணித பாடங்களை படித்த மாணவ, மாணவியர் கீழ்க்கண்ட இளநிலை/ முதுநிலை பட்டங்களைப் பெற்றபின் வன விஞ்ஞானியாக முயலலாம். வனவியல், நீரியல், நீர் மேலாண்மை, உயிரி தொழில்நுட்பம், வேளாண்மை, மண் அறிவியல், தாவரவியல், வேதியியல், பூச்சியியல், விலங்கியல், வேளாண்மை பொருளியல், நுண்ணுயிரியல், மர அறிவியல், கடல் நுண்ணுயிரியல், கடல் அறிவியல், சுற்றுச்சூழல் மேலாண்மை, மரபியல், தாவர மரபியல், விதை அறிவியல் உள்ளிட்டத் துறைகளில் முதுநிலை பட்டமும், வேளாண்மை பொறியியல், கட்டுமான பொறியியல் ஆகியவற்றில் இளநிலை பட்டமும் பெற்றவர்கள் வன விஞ்ஞானி ஆகலாம்.
வனவியல் விஞ்ஞானி ஆகும் வழிகள்: அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுமற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு விஞ்ஞானிகள் இங்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் முதுநிலை பட்டதாரிகளும், பொறியியல் இளநிலை பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://icfre.gov.in/recruitment.
(தொடரும்)
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்-விஞ்ஞானி ஆகும் வழிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.