

பனிக்கரடிகளும் பென்குவின்களும் பனி மூடிய துருவப் பகுதிகளில் உலாவுவதை காணொலிகளில் பார்த்திருப்பீர்கள். துருவப் பகுதியில் பயணம் செய்து அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டால் எப்படி இருக்கும்? அதற்கான வாய்ப்பு இந்தியாவில் உண்டா? அதற்கு என்ன படிக்க வேண்டும்?
வடதுருவமான ஆர்க்டிக் பகுதியில் பூர்வகுடி மக்கள் வசிக்கிறார்கள். பல கிராமங்கள் இருக்கின்றன. இந்தியாவின் ஆய்வுக்கூடம் ஹிமாத்ரி 2008-ல்அங்கு தொடங்கப்பட்டது. இந்திய விஞ்ஞானிகளின் குழு அங்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு திரும்பும். வளிமண்டலம், உயிரியல், சூழலியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடந்து வருகின்றன.
இந்திய ஆய்வுக்கூடம்
தென் துருவமான அண்டார்டிகா ஆண்டு முழுவதும் பனியினால் மூடப்பட்ட கண்டம். இங்கு எப்போதும் பலமான காற்று வீசும். இங்கு பூர்வகுடிகள் என்று யாருமில்லை. இதனால் இக்கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஆர்வம் பல நாடுகளுக்கும் ஏற்பட்டது. பல நாடுகள் தங்களது ஆய்வுக்கூடங்களை அமைத்திருக்கிறார்கள்.
இந்தியாவும் தனது முதல் ஆய்வுக்கூடமான ‘தக்ஷ்ன கங்கோத்ரி’யை 1984-ல் அமைத்தது. அந்த ஆய்வகம் பனியினால் மூடப்பட்டதால் மைத்ரி (1989), பாரதி (2012) ஆகியவை இரண்டு ஆய்வுக்கூடங்கள் பிறகு அமைக்கப்பட்டன. வளிமண்டலம், உயிரியல், புவியியல், சூழலியல், மனித உடலியல், மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகள் இங்கு நடந்து வருகின்றன.
எப்படி விஞ்ஞானியாவது?
துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்யும் ஒரே இந்திய நிறுவனம், கோவாவில் அமைந்திருக்கும் ‘துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையம்’ (National Centre for Polar and Ocean Research-NCPOR). புவி அறிவியல் அமைச்சகத்தை சேர்ந்த மத்திய அரசின் நிறுவனம் இது.
அறிவியல் துறைகளில் முதுநிலைப் பட்டம் அல்லது பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்நிறுவனத்தில் விஞ்ஞானியாக விண்ணப்பிக்கலாம். தற்காலிக ஆராய்ச்சியாளர் பணிகளும் உண்டு. மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளையும் இந்நிறுவனம் வழங்கு கிறது.
துருவப் பயணங்கள்
துருவப் பகுதிகளுக்கான ஆய்வுப் பயணங்களை இந்த நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. இது குறித்த அறிவிப்புகள் நாளிதழ்களில் வெளியாகும். பிற ஆராய்ச்சி நிலையங்களில் பணி புரியும் விஞ்ஞானிகளும், கல்லூரிப் பேராசிரியர்களும் இதில் பங்கேற்கலாம். கப்பல் பயணம், தங்கும் வசதி ஆகியவற்றை இந்நிறுவனமே ஏற்றுக்கொண்டு ஆராய்ச்சி முயற்சிகளுக்கு உதவுகிறது. மேலும் விவரங்களுக்கு: www.ncaor.gov.in உங்கள் துருவ ஆராய்ச்சி வெறும் கனவாக இருந்துவிடக்கூடாது. அதற்கான எதிர்கால திட்டத்தை இப்போதே தொடங்குங்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com