Published : 28 Feb 2020 10:46 AM
Last Updated : 28 Feb 2020 10:46 AM

தித்திக்கும் தமிழ்-15: பாட்டி சொல்லில் உள்ள இலக்கணம் புரிந்ததா?

கவிதா நல்லதம்பி

மதியும் மலரும் பூங்காவில் அமர்ந்திருந்தார்கள். 'பந்தப் பார்த்தீங்களா'ன்னு கேட்ட சிறுவர்களிடம் 'அந்த ஊஞ்சலுக்குக் கிழக்க கிடக்குது பாரு'ன்னு பாட்டி சொல்ல, சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பொருளோடு பார்த்துக் கொண்டார்கள்.

மதி: எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே..

மலர்: என்னக்கா, உன் இலக்கண வகுப்ப இங்கயே தொடங்கிட்டயா?

மதி: இல்ல மலர். நாம பேசுகிற சொற்கள், அந்தச் சொற்களைத் தொடராக்குற விதம்னு எல்லாமே ஒரு பொருளோடதான் இருக்கு.. நான் அதத்தான் தொல்காப்பியரோட மொழியில சொன்னேன்.

மலர்: அக்கா, இப்ப பாட்டி சொன்னவார்த்தைகள்ல இருந்துதான சொல்ற.

மதி: ஆமாம். நாம பேசும்போது, நம்மைஅறியாமலேயே இலக்கணத்தைப் பயன்படுத்திக்கிட்டேதான இருக்கோம். அதை நினைச்சேன்.

மலர்: இப்ப பாட்டி சொன்னதுல இருந்து என்ன இலக்கணத்தைக் கண்டுபிடிச்சன்னு சொல்லட்டுமா, நான்காம் வேற்றுமை உருபுதான?

மதி: சரியாச் சொல்ற மலர். நேத்து நாம பேசிக்கிட்டிருந்தோமே எல்லைப் பொருள்னு. அதைத்தான் நினைச்சிட்ருந்தேன்.

மலர்: ஆமாக்கா. நீ சொல்ற மாதிரி, எல்லாத்தையும் இலக்கணத்தோடதான் பேசுறோம். ஆமாஎல்லைப் பொருளுக்கு வேற எடுத்துக்காட்டுசொல்லேன். பாட்டி ஊஞ்சலுக்குக் கிழக்கே பந்து கிடக்குதுன்னு சொன்னாங்க.

மதி: இந்தியாவிற்குத் தெற்கே இலங்கை அமைந்துள்ளது. தோட்டத்திற்கு அப்பால் கிணறு உள்ளது. இந்தத் தொடர்கள்ல இடம்பெறும் 'கு' எல்லைப் பொருளைச் சொல்ல உதவுது.

மலர்: இதையெல்லாம் தவிர்த்து வேறு பொருளைத் தர 'கு' என்கிற உருபு பயன்படுதா?

மதி: ஆமா மலர். தகுதிப் பொருள்னு சொல்றோம். வீதம், காலவரையறை போன்ற பொருள்கள்லயும் வரும். எடுத்துக்காட்டு, கற்றோர்க்கு அழகு பண்புடன் இருத்தல், மன்னருக்கு அழகு மக்களைப் பேணுதல் இந்த இரண்டுலயும் என்ன பொருளைத் தர 'கு' வந்திருக்கு?

மலர்: தகுதிப் பொருள்தானே கற்றோருக்கும், மன்னனுக்குமான தகுதியைச் சொல்லப் பயன்பட்டிருக்கு.

மதி: சரியாச் சொல்ற. நூற்றுக்குப் பத்துப் பேர்தான் வந்தனர், இந்தத் தொடர்ல வீதம்னா புரியுதா?

மலர்: நூற்றுக்குப் பத்து பேர். இங்க நூறுலஎவ்வளவுன்னு சொல்றது தான வீதம். இப்பசகவீதம்னு சொல்றோம்ல. நாலுக்கு மூணு. இப்படியும் சொல்லலாம்ல. கால வரையறைக்கு நானே சொல்லட்டுமா? மாலை ஐந்து மணிக்கு வகுப்பு முடியும்.

மதி: மலர், ‘கு’வுக்குப் பதிலாக, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’ போன்ற உருபுகள்கூட வரும். இதைச் சொல்லுருபுகள்னு சொல்வாங்க.

மலர்: நான் இந்த இரண்டுக்கும் எடுத்துக்காட்டுத் தொடர்களைச் சொல்றேன். கல்வியின்பொருட்டு பயணம் மேற்கொண்டான், தேர்வின் நிமித்தம் கண் விழித்துப் படித்தான்.

மதி: சில இடங்களில், ‘கு’ உடன் ‘ஆக’ என்பதும் சேர்ந்து வரும். வெற்றிக்காக விடாது உழைத்தான். இந்தத் தொடரைப் பார்த்தா உனக்கே புரியும்.

மலர்: ஆமாக்கா. நாம நான்காம் வேற்றுமை உருபைப் பற்றியே நிறையப் பேசிக்கிட்டிருக்கோம். ஐந்தாம் வேற்றுமை உருபைப் பற்றிச் சொல்லேன். இன் தானே. இல் கூட உண்டே.

மதி: ஆமாம். அதை நீங்கல் வேற்றுமைன்னுகூடச் சொல்வாங்க. இல் கூட.. இந்த உருபு எந்தப் பெயரோட சேருதோ அந்தப் பெயரை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுங்கிற பொருள்களாக வேறுபடுத்தும்.

மலர்: சரிக்கா, நேரமாகுது. அம்மா காத்திருப்பாங்க. தொடர்ந்து இன்னொரு நாள் பேசுவோம்.

கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x