Published : 11 Oct 2019 01:17 PM
Last Updated : 11 Oct 2019 01:17 PM

தித்திக்கும் தமிழ்-1: ஓரெழுத்து ஒரு மொழி

பரிசுடன் வந்த அக்கா நற்பின்னையைப் பார்த்ததும், உற்சாகமாக ஓடிச்சென்று அவள் கையிலிருந்ததை வாங்கிப் பார்க்கிறாள் வெண்பா.

வெண்பா: ஐ... என்னக்கா இது ?
நற்பின்னை: தமிழ் வகுப்பில் சொற்போட்டியில் கிடைத்த பரிசு வெண்பா.
வெண்பா: அப்படியா, என்ன விளையாட்டுன்னு சொல்லேன்.
நற்பின்னை: நேத்து வகுப்புல ‘ஓரெழுத்து ஒரு மொழி'ன்னு ஆசிரியர் ஒரு பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. அதுல நடத்தின போட்டிதான். யார் நிறைய சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் சொன்னாங்களோ அவங்களுக்குத்தான் பரிசு. நான்தான் நிறைய சொன்னேன்.
வெண்பா: ஓ.. ஓரெழுத்து ஒரு மொழியா, அப்படின்னா என்ன?
நற்பின்னை: ஒரே எழுத்தா இருந்தாலும் அந்த எழுத்து தனியா நின்னு ஒரு சொல்லைப் போலவே பொருள் தரும்.
வெண்பா: அப்படியிருக்கா என்ன? எங்க அப்படி ஒரு எழுத்தைச் சொல்லேன்.
நற்பின்னை: நீயே சொன்னயே, ஐ.. வெண்பா: சொல்லுக்கா.. விளையாடாத..
நற்பின்னை: அதுதான் ஓரெழுத்து ஒரு மொழி.
வெண்பா: சரி.. 'ஐ' ன்னா என்ன, வியப்பா இருந்துச்சுன்னா, ஆச்சரியப்பட்டா சொல்றோம்.. அதுக்கு வேற பொருள்கூட இருக்கா?
நற்பின்னை: ‘ஐ' ங்கிற எழுத்துக்கு அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்புன்னு பல பொருள் இருக்கு.
வெண்பா: ஒரு எழுத்துக்கா இவ்வளவு பொருள் இருக்கு? ம்.. வேற எழுத்து இருக்கா இந்த மாதிரி..
நற்பின்னை: நிறைய இருக்கு. ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 இருக்காம். உனக்கு இதைப் போல எழுத்து ஏதாவது நினைவு இருக்கா ?
வெண்பா: எனக்கா.. கை, தை, தீ, நீ, வா, போ, பூ இந்த மாதிரித்தானே.
நற்பின்னை: பார்த்தியா, உனக்கே நிறைய தெரிஞ்சிருக்கு. சரி. நீ சொன்ன எழுத்துக் கெல்லாம் பொருள் என்னன்னு தெரியுமா ?
வெண்பா: ‘தை'ன்னா தைக்கறது, தைமாசம்.. வேற பொருள்கூட இருக்கா.
நற்பின்னை:‘கை'ங்கிற ஒரு எழுத்து உடல் உறுப்புங்கறதைத் தவிர ஒழுக்கம், சிறகு, ஒப்பனைன்னு இன்னும் பல பொருள் தரும். தைக்கறதும், மாதத்தோட பேரும் மட்டுமில்ல ‘தை'ங்கிற எழுத்து பொருத்துதல், ஒப்பனை செய்தல்னுகூடப் பொருள் தருதாம்.
வெண்பா: ‘தீ'ன்னா நெருப்புன்னுதானே பொருள்?
நற்பின்னை: கோபம், தீமை, நரகம்னு இன்னும் சில பொருள் தருது ‘தீ'ங்கிற ஓரெழுத்து. பூவுக்கு, பூமி, பிறப்புன்னு கூடப் பொருள் இருக்கு.
வெண்பா: ‘ஆ'ங்கிற எழுத்துக்கு என்ன பொருள்? நீ என் காலை மிதிச்சா ‘ஆ'ன்னு கத்துவேன். வேற என்ன?
நற்பின்னை: ‘ஆ'ன்னா நீ போடுற சத்தம் மட்டுமில்லை வெண்பா. நீ ஆச்சரியப்படுற அளவுக்குப் பொருள் இருக்கு. பசு, இரக்கம், ஆன்மா, நினைவுன்னு பல பொருள் இருக்கு.
வெண்பா: சரிக்கா. ‘கோ' ன்னா என்ன ? அந்தத் தலைப்புல ஒரு படம்கூட வந்ததே..
நற்பின்னை: ‘கோ'ங்கிற எழுத்து அரசன், தலைவன், பசு, இறைவன்னு நிறைய பொருள்கள்ல பயன்படுத்தப்பட்டிருக்கு. வேற எங்கயாவது ‘கோ' வைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறயா?
வெண்பா: ஆமாம். நான் கூட கோவில்ல பசுக்கள் கட்டியிருக்கிற இடத்துல கோசாலைன்னு எழுதியிருக்கிறதைப் பார்த்திருக்கேன்.
நற்பின்னை: சரி வெண்பா. நேரமாச்சு. வா, வீட்டுப் பாடத்தை முடிக்கலாம்.

- கவிதா நல்லதம்பி

(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர், தமிழ்த் துறை பேராசிரியை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x