

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கான இந்தி மொழி பயிற்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து அதற்காக ரூ.6 லட்சம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒரு வருடப் பயிற்சியும் சென்னையில் இயங்கி வரும் இந்தி பிரச்சார சபா மூலமாக நடத்தப்படுகிறது. பின் அவர்கள் மூலமே சான்றிதழும் வழங்கப்படும் என்று திமுக முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, ‘‘உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தவே இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. இரண்டு மொழிகளையும் தரமான ஆசிரியர்கள் கற்பிக் கின்றனர்.
2014-ம் ஆண்டில் இருந்தே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மற்றும் இந்தி கற்பிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், உலக மொழியான பிரெஞ்சு, இந்திய மொழியான இந்தி ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. தமிழை விட அதிகம் பேசப்படும் மொழிகளாக இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு மொழிகளில் இருந்து இது தேர்ந்தெடுக்கபட்டது.
இடையில் பிறமொழிப் பயிற்சி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கற்பிக்கப்படுகிறது. இந்திபிரச்சார சபாவில் இருந்து நேரடியாக யாரும் வந்து, இந்தியைக் கற்றுக்கொடுக்கவில்லை. அதேபோல இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவில்லை. விருப்பப் பாடமாகவே உள்ளது. இந்தி வேண்டும் என்று மாணவர்களேதான் தேர்ந்தெடுத்தனர். விருப்பப் பாட அடிப்படையில்தான் இந்தி கற்பிக்கப்படுகிறது.
நேர்முக வளாகத் தேர்வுஇன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் நம் மொழியின் சிந்தனைவளரும். மாணவர்களின் திறனைவளர்த்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க விரும்புகிறோம். இதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேர்முக வளாகத் தேர்வை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.