மாதிரி பள்ளியாக திகழும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

மாதிரி பள்ளியாக திகழும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
Updated on
1 min read

மதுரை

மதுரை மாவட்டத்தில் மற்ற பள்ளிகளுக்கு மாதிரி பள்ளியாக திகழ்கிறது யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

மதுரை அருகே உள்ள யா.ஒத்தக்கடையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கல் குவாரி தொழிலாளர்கள், கட்டுமானக் கூலித் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். சுமார் 9 ஏக்கர் பரப்பளவில்கட்டிட வசதிகளுடன் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வளர்ந்து சோலையாகக் காட்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு முதல் ஆங்கில வழிக் கல்வியாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. தற்போது இந்த வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்காகப் பிரத்யேக வகுப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.

மேலும் ஒன்றாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை சுமார் 1,700 மாணவியர்படிக்கின்றனர். இவர்களுக்கு சுமார்48 ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறைகளும் உள்ளன. இதன் மூலம் ஆன்லைனிலும் பாடம் கற்பிக்கும் வசதியையும் இப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, யோகா, நடனம், இசைப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இதனால்மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியிலும் சிறந்து விளங்குகின்றனர்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை பங்கஜம் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் மாதிரி பள்ளியாகத் திகழ்கிறது. அரசு பொதுத்தேர்வுகளில் கடந்த 3 ஆண்டுகளாக நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளோம். மேலும் தேர்தல் வாக்குப்பதிவின்போதும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில் மாதிரி வாக்குச் சாவடியாகவும் திகழ்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in