Published : 04 Jan 2023 06:04 AM
Last Updated : 04 Jan 2023 06:04 AM

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு; போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் பரவலாகக் காணப்படுவதாகவும், கல்வி நிலையங்களின் அருகில்போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத் தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பற்றியும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்திட அறிவிக்கப்பட்டுள்ள புதிய வாட்ஸ் அப் எண் 9498111191 குறித்தும், பொதுமக்கள் இதுதொடர்பான புகார் அளிப்பதை எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள காவல்துறை முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது, வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

“தன் காவல் சரகத்தில் ஒரு கடையில்கூட கஞ்சா விற்கவில்லை” என்று ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் அறிவிக்கும் நிலை வர வேண்டும். "தன் உட்கோட்டத்தில் அப்படியொரு பொருளின் நடமாட்டமே இல்லை" என்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் சொல்லும் காலம் வர வேண்டும்.

எல்லாவற்றையும்விட தன் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை எதுவுமே இல்லை என்ற நிலையை எட்டிவிட்டோம் என பெருமிதத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் தெரிவிக்கும் நிலை வரவேண்டும். அப்போது தான் தம்மைப் போல், தங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்ற நிம்மதி பெற்றோர்களுக்கும், தாய்மார்களுக்கும் வரும் என்று முதல்வர் தெரிவித்தார்.

ஒவ்வொரு குற்றவாளி கைது செய்யப்படும்போதும் அக்குற்றவாளி 2-வது முறையாக இந்தக் குற்றத்தைச் செய்கிறாரா என்பதை ஆய்வு செய்து, அதுபோன்ற குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதை சட்டரீதியாகத் தடுத்திடவும், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் சி.ஆர்.பி.சி.யின் (Cr.Pc) கீழ் பிணை முறிவு பத்திரம் மூலமாக “உறுதிமொழி பெறுவது” (Bind Over) கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும்நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மருந்துகள் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருவதால் மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து காவல் அதிகாரிகள் செயல்பட்டு, மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்திட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அண்டை மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமைஇயக்குநர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்த ஆலோசனை மேற்கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திடவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்திடவும் வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின்உத்தரவிட்டார். இந்த தகவல் அரசுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x