Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

பிளஸ் 2 மாணவர்கள் கல்வித்தகுதியை பள்ளிகள் வாயிலாக பதிவு செய்யலாம்: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பள்ளிகள் வாயிலாக நாளை (செப்.17) முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு:

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் https://tnvelaivaaippu.gov.in/ என்ற துறையின் இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (செப்.17) முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x