

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கற்றல் குறைபாட்டை சரிசெய்ய உதவும் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ கையேடுவழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாட்டை சரிசெய்ய, இடைக்கால சிறப்பு கல்வித் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது.
இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில், பிரத்யேக ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கையேட்டை விநியோகம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவலால் 1 முதல் 11-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி, தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர். எனினும், ஒரு வகுப்பை முழுமையாகப் படிக்காமல் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்த வகுப்புகளில் கணிதம் உட்பட முக்கியப் பாடங்களில் பின்தங்க நேரிடும்.
அதேபோல, நேரடி கற்பித்தல்தடைபட்டுள்ளதால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடு ஏற்படக்கூடும். இதை சரிசெய்யவே, இடைக்கால சிறப்புக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகளில் நடத்தப்படும் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ போல மாணவர்கள் நேரடி முறையில் படிக்காத, முக்கியப் பாடங்கள் கொண்ட அடிப்படைக் கல்வியை அறியும் வகையில், வகுப்புவாரியாக சிறப்பு கையேடுகள் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்கள் வழியாக பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 6 முதல் 9-ம் வரை பயிலும் சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கையேடு விநியோகம் செய்து, அவற்றைப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும், கையேடு விநியோகத்தின்போது, கரோனா வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.