Published : 01 Mar 2021 07:43 PM
Last Updated : 01 Mar 2021 07:43 PM

மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை எப்படி உயர்த்துவீர்கள்?- அதிகாரிகளிடம் மத்தியக் கல்வி அமைச்சர் கேள்வி

மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை எப்படி உயர்த்துவீர்கள் என்பது குறித்த திட்டத்தைத் தெரிவிக்குமாறு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

உலகில் வறுமையைப் போக்கவும், நிலையான, நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்களில் வருகிற 2035-ல் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 என்ற அளவில் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ராஷ்ட்ரிய உச்சாதர் சிக்‌ஷா அபியான் (RUSA) திட்ட அதிகாரிகளுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ''நாட்டில் உயர் கல்வியைத் தொடர அதிக மாணவர்களை ஊக்குவிப்பதில் கல்வி நிறுவனங்களும் நிர்வாகத்தினரும் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திறன்களை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன என்பது குறித்துப் பகிர வேண்டும்'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் உயர் கல்விச் செயலாளர் அமித் கரே மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

18-23 வயதில் உள்ளவர்களில் எத்தனை பேர் உயர் கல்வியில் சேர்ந்தார்கள் என்பதைக் கணக்கிட்டு, மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x