Published : 17 Aug 2020 12:40 PM
Last Updated : 17 Aug 2020 12:40 PM

பள்ளி மாணவர்களுக்கு தேசிய அறிவியல் திறனறித் தேர்வு: ரூ.25 ஆயிரம் முதல் பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள்

இணைய வழியில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வில் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆர்டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. மாணாக்கர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதோடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் கரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணவர்களை எழுதவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 29-11-2020 (ஞாயிறு) மற்றும் 30-11-2020 (திங்கள்) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது.

இவ்வருடம் இந்த திறந்த புத்தகத் தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் எழுத இயலும். முக்கியமாகத் தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே இருக்கும்.

தேர்வின் முக்கிய நோக்கங்கள்

* அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணாக்கர்களின் பங்கேற்பை அதிகரித்தல். அறிவியல் துறையில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு பற்றி அறிதல்.

* மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம்.

தேர்வுக் கட்டணம் : 100 ரூபாய்

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 30-09-2020

தேர்வு நடைபெறும் நாள் : 29-11-2020 (ஞாயிறு) அல்லது 30-11-2020 (திங்கள்)

தேர்வு நேரம்: 90 நிமிடங்கள் (1.30 மணி நேரம்)

நேரம்: காலை 10. 00 மணி முதல் இரவு 8.00 மணி வரை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.

(ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)

யாரெல்லாம் தேர்வு எழுதலாம்?
6-ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.
6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.

தேர்விற்கான பாடத்திட்டம்
பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீதக் கேள்விகளும், வியான்கடேஸ் பாபுஜி கெட்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் நேரத்தை அளவிடுவதில் அவரின் அறிவியல் சாதனைகள் என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீதக் கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீதக் கேள்விகளும் இருக்கும். மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

எவ்வாறு பதிவு செய்வது?
www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி வழியாக
பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க இயலும். மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.

தனித்தேர்வர்களாக
தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

பள்ளி அளவில்
பள்ளியில் ஒரு வகுப்புக்குக் குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்குப் பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்ட அளவில்
மாவட்ட அளவில் (6 முதல் 11-ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாநில அளவில்
* மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்டத் தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.

* இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.

* 120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும்.

தேசிய அளவில்
* ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.

* தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.

* தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11-ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

* மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

* அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.

இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.மேலும் இந்த வருடம் பதிவு செய்யும் மாணாக்கர்கள் அனைவரும் இந்திய அளவிலான மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு
கண்ணபிரான், மாநில ஒருங்கிணைப்பாளர், வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்,
இ-மெயில்: vvmtamilnadu@gmail.com
தொடர்புக்கு: 9942467764, 8778201926

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x