கரோனாவால் மாணவர்களைப் பிரிந்து வாடும் ஆசிரியர் பாடிய பாடல்: இணையத்தில் வைரல்

கரோனாவால் மாணவர்களைப் பிரிந்து வாடும் ஆசிரியர் பாடிய பாடல்: இணையத்தில் வைரல்
Updated on
1 min read

கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களைப் பிரிந்து வாடும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடிய பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த அலைகள் மக்களைப் புரட்டிப் போட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுப் பாடங்கள் நடத்தப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாகப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்ட நிலையில், தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு 14 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் மாணவர்களைப் பிரிந்து வாடும் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியர் முருகேஸ்வரி. அவர் 'குழந்தைச் செல்வங்களே.. எங்கே நீ எங்கே?' என சினிமா பாடல் பாணியில், அரசுப் பள்ளி மாணவர்களைத் தேடும் பாடல் ஒன்றைப் பாடி வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடக்கப் பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு முழுக்கப் பள்ளிக்குச் செல்லாத நிலையில், புதிய கல்வியாண்டும் தொடங்கிவிட்டது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, தற்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரிடமும் எழுந்துள்ளது.

பாடலைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in