

கரோனா தொற்றால் புதுச்சேரி ஜிப்மர் பட்டமளிப்பு விழா நடப்பாண்டு ரத்தாகி உள்ளது. இதனால் மாணவர்கள் சான்றிதழ்களைத் தபாலில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய மருத்துவ நிறுவனமான ஜிப்மரில் நாடு முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ், எம்.டி. மற்றும் முதுகலைப் பட்டயப் படிப்புகளைப் படித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பட்டம் பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று காரணமாக நடப்பாண்டு (2019-20) பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மாணவர்களுக்குச் சான்றிதழ்களைத் தபால் மூலம் அனுப்ப ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ரூ.1500-ஐ இந்திய ஸ்டேட் வங்கி மூலம் மாணவர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை academicpolicy@jipmer.edu.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..
கூடுதல் விவரங்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் அறியலாம் என ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.