

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பசியால் தவித்த பூம் பூம் மாட்டுக்காரர்களின் குடும்பங்களுக்கு இரண்டு ஆசிரியைகள் தங்களது கூட்டு முயற்சியால் அன்னதானம் அளித்தனர்.
சீர்காழி அருகேயுள்ள அரசூர் ஜெ.ஜெ நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பூம் பூம் மாட்டுக்காரரர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் இவர்கள் யாரும் தொழிலுக்குப் போகாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இதனால் வருவாய் இல்லாமல் வறுமையின் காரணமாக பசியால் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த பலரும் இவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இவர்களின் நிலைமையை அறிந்த அண்ணன் பெருமாள் கோயிலைச் சேர்ந்த ஆசிரியை கே.கிருத்திகா குடும்பமும், மணலகரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை எஸ்.ஆர்.சித்ரா குடும்பமும் இணைந்து இவர்களுக்கு உணவு சமைத்து எடுத்துவந்து அன்னதானம் அளித்தனர்.
பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மட்டுமல்லாது கிராமவாசிகள் 600 பேருக்கும் சீர்காழி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 120 பேருக்கும் இவர்களால் அன்னதானம் அளிக்கப்பட்டது.