

வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா.
திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறையத் துவங்கியுள்ளதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கோடை சீசன் மாதங்களில் மட்டும் இருந்து வந்தது. பின்னர் வார விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. தற்போது ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை காணப்படுகிறது.
கோடை சீசன், ஆஃப் சீசன், வார விடுமுறை தினங்களில் மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு சுற்றுலாபயணிகளின் வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்து செல்லும். அதிக மழைப் பொழிவு காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படும்.
படகு சவாரி அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் ஏரி.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பிளஸ் 2, அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
மேலும், கோடை சீசனுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை தள்ளிப் போட்டிருக்கலாம் என்பதால் கடந்த சில தினங்களாக கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் இன்றி காணப்படும் கொடைக்கானல் ஏரிச்சாலை.
சாலைகளில் சுற்றுலா வாகனங்களும் அதிகம் காணப்படாததால் ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏப்ரல் மாதம் கோடை சீசன் துவங்கும்போது சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கம்போல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்பவர்கள்.