

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் செடிகள் நடவு பணியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள 128-வது மலர் கண்காட்சிக்காக 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 128-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகள் அமைத்து, பல வண்ண மலர்ச் செடிகள் நடவு செய்யப்படுகின்றன.
இன்கா மேரிகொல்டு, பிரன்ச் மேரிகோல்டு, லில்லியம்ஸ், டேலியா போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியை தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் நவநீதா முன்னிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு 2025-ல் 7.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. இவ்வாண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய ரக ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா மற்றும் பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், சிலோசியா, ஆன்டிரைனம், டயான்தஸ், ஆஸ்டர், ஜெர்பரா, க்ரைசாந்திமம், டெல்பினியம், சால்வியா, ஆந்தூரியம் போன்ற 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் உள்ளன.
ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பனியின் தாக்கம் ஏற்படாத வண்ணம் கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாப்பு செய்யப்படும். மேலும், எதிர்வரும் மலர் கண்காட்சியையொட்டி மலர்க்காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 50,000 வண்ண மலர்த் தொட்டிச் செடிகள் வைக்கப்படும்.
இந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில், துணை இயக்குநர் (பொ) பபீதா, உதவி இயக்குநர் ஜெயந்தி, பைசல், தோட்டக்கலை துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.