

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
ஊட்டி / சேலம் / பழநி: கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சமவெளி பகுதிகளில் கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் தற்போது தேர்தலும் முடிவடைந்துள்ளது. இதனால், கோடை விடுமுறையை இதமாக கழிக்க, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துவருகிறது.
ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களைகண்டு ரசித்தனர். கேரளம், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக வியாபாரம் சூடுபிடித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்காடு: இதேபோல் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடைகால வெப்பம் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை போன்ற காரணங்களால் பலரும் குடும்பத்துடன் ஏற்காடுக்கு சுற்றுலா வருகின்றனர். இங்கு நிலவி வரும் குளுமையான சீதோஷண நிலையை அனுபவிக்க பலரும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். இதனால், சாலையோர கடைகளில் வியாபாரம் களைக்கட்டியது. படகுத்துறை, மான் பூங்கா, பகோடா பாயின்ட், தாவரவியல் பூங்காக்களில் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மலர்களை காண குவிந்த சுற்றுலா பயணிகள். படம்:ஆர்.டி.சிவசங்கர்
கொடைக்கானல்: இதேபோல கொடைக்கானலுக்கும் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, குணா குகை, மோயர் சதுக்கம், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் வெளிமாவட்டம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏரியில் படகு சவாரி மற்றும் குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தனர்.கொடைக்கானலில் நேற்று பகலில் 26 டிகிரி செல்சியஸ், இரவில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.