

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
'ஸ்கை வாக்' என்று அழைக்கப்படும் இந்த கண்ணாடி நடைபாலம், விசாகப்பட்டினத்தில் மனதைக் கவரும் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேன்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த நடைபாலம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை அளிக்கிறது.
விசாகப்பட்டினம் மாநகர வளர்ச்சி ஆணையத்தால் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தின் கண்ணாடிகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 40 மி.மீ. தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் மற்றும் சூறாவளி காற்றை தாங்கக் கூடியது.
பொறியியல் அற்புதமாக கருதப்படும் இந்தப் பாலம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மிக்க வைக்கும் அழகை மட்டுமின்றி, வங்காள விரிகுடா மற்றும் விசாகப்பட்டினம் நகரின் ரம்மியமான காட்சிகளையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
இப்பாலத்தை விசாகப்பட்டினம் எம்.பி. ஸ்ரீபரத் நேற்று காலையில் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இப்பாலம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் எனவும் 15 நிடங்களுக்கான கட்டணம் ரூ.300 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.