கொடைக்கானல் மலர் கண்காட்சி, கோடை விழா மே 26-ல் தொடக்கம்

கொடைக்கானல் மலர் கண்காட்சி, கோடை விழா மே 26-ல் தொடக்கம்
Updated on
1 min read

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை நடைபெற உள்ளது என வருவாய் கோட்டாட்சியர் ரா.ராஜா தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி மே 26-ல் தொடங்கி மே 28 வரை நடைபெற உள்ளது. இதே போல், கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கண்காட்சி மற்றும் கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடக்க விழாவில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என, அவர் கூறினார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி உடனிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in