

உதகை: நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக் களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான பூங்காக்கள், அணைகள், புல்வெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காட்சி முனைகள் உள்ளன.50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. குறிப்பாக, உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய பகுதிகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஆண்டுதோறும் கோடை காலங்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்படுகிறது. சினிமா படப்பிடிப்பு நடத்தினால் சுற்றுலா பயணிகளுக்கும், படக்குழுவினரும் இடையூறுகள் ஏற்படும். இதனால், கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தின் போது ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்து வருகிறது.
இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, "உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த, வரும் ஜூன் 30-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள், எந்தவித இடையூறும் இன்றி பூங்காக்களை சுற்றி பார்க்கலாம்" என்றனர்.