Published : 12 Jan 2023 04:33 AM
Last Updated : 12 Jan 2023 04:33 AM

விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழைப் பாலம் பணி தொடக்கம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணி நேற்று தொடங்கியது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு கடல் நடுவே பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அதற்கு அடுத்த பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலா பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சங்களாகும்.

இங்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தா, குகன்,பொதிகை ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் பாறைகள் அதிகமாகவும் உள்ளன.

இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்கள், கடல் சீற்றம், சூறைக்காற்று போன்ற நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்விரு பாறைகள் இடையே ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி இழையினாலான கூண்டுப்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இப்பணிக்கான ஒப்பந்தம் சென்னையைச் சேர்ந்த கட்டுமானநிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும்.

இதற்கான முதற்கட்ட பணிநேற்று தொடங்கியது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும்திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐஐடி-க்குஅனுப்பி பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணியில் பொறியாளர் குழுவினர் நேற்று ஈடுபட்டனர்.

ஆய்வு முடிவுக்குப் பிறகுபாலம் கட்டுமானப் பணி தொடங்கவுள்ளது. பாலம் அமைக்கப்பட்டால், விவேகானந்தர் பாறையில் இருந்து நடந்தே திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x