மே 22 வரை தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை தடை

மே 22 வரை தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை தடை
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் ‘ஃபாஸ்ட் டேக்’ சோதனைச் சாவடி மாற்றி அமைக்கப்படுவதால், வரும் 22-ம் தேதி வரை தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

உதகையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வர சுற்றுலா பயணிகள் திட்டமிடுவது வழக்கம். ஆனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொட்டபெட்டா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது வாகனக் கட்டணம் வசூலிக்க காத்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி உதகையில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.

இதைக்கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனைச்சாவடியில் ‘ஃபாஸ்ட் டேக்’ மின்னணு பரிவர்த்தனையை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ‘ஃபாஸ்ட் டேக்’ சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 22-ம் தேதி வரை தொட்டபெட்டா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலையில் ‘ஃபாஸ்ட் டேக்’ சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி 16-ம் தேதி (இன்று) முதல் வரும் 22-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. எனவே, வரும் 22-ம் தேதி வரை தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in