Published : 29 Apr 2024 05:49 AM
Last Updated : 29 Apr 2024 05:49 AM

உதகை மலர் கண்காட்சி மே 10-ல் தொடக்கம்: முதல்முறையாக 11 நாட்கள் நடக்கிறது

உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் 126-வது மலர்க் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டு, மலர்க் கண்காட்சி மற்றும் பழக்காட்சி மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க்காட்சி மே 17ம்-தேதி முதல் 22-ம் தேதி வரை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மலர்க் கண்காட்சியை மே 10-ம் தேதி முதல் 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறியதாவது: கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, நேற்று மட்டும் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 20,000 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

எனவே, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், உதகையில் மலர்க் காட்சி மே 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையும், குன்னூர்சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக் காட்சி மே 24 முதல் 26 வரையும் நடைபெறும். சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உதகை மலர்க் கண்காட்சி முதல்முறையாக 11 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x