Last Updated : 01 Jan, 2024 05:11 PM

2  

Published : 01 Jan 2024 05:11 PM
Last Updated : 01 Jan 2024 05:11 PM

புதுச்சேரியில் தனியார் புத்தாண்டு ‘பார்ட்டி’களில் ‘ஏமாற்றப்பட்ட’ வெளியூர் சுற்றுலா பயணிகள்!

புதுச்சேரி: புத்தாண்டு தினத்தையொட்டி புதுச்சேரியில் நகரெங்கும் ஏராளமான தனியார் பார்ட்டி நிகழ்வுகள் நடத்தினர். அதிகமானோரை அனுமதித்ததுடன், அறிவித்தப்படி உணவோ, மதுவோ பல இடங்களில் தராததால் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாற்றத்துடன் பல வெளியூர் பயணிகள் ஊர் திரும்பினர். இந்தப் போக்கை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. நகரெங்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். இசை நிகழ்வுகளை ரசித்து கொண்டாடினர்.

புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் கடற்கரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வெளி மாநிலங்கள் தொடங்கி வெளிநாட்டவர் தொடங்கி உள்ளூர் மக்கள் என பலரும் கடற்கரையில் குவிந்திருந்தனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். அனைவரும் ரசிக்கும் வகையில் மின் அலங்காரம் இசை நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடல், டூப்ளே சிலை மற்றும் பாண்டி மெரினா தொடங்கி பல இடங்களில் இசை நடனத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஆயிரக் கணக்கில் இளையோர் வந்திருந்து மகிழ்ந்தனர்.

கடற்கரை சாலையில் புதுச்சேரி அரசு தரப்பில் இலவசமாக புத்தாண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகமானோர் குவிந்ததால் அவர்களை புத்தாண்டு பிறந்ததும் அங்கிருந்து கலைந்து போகச் செய்ய போலீஸார் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

அதேபோல் தனியார் நிறுவனங்கள் சார்பில் இசை நடன நிகழ்ச்சிகளுடன் விருந்துகளும் கட்டண அடிப்படையில் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். ஹோட்டல்களிலும் இந்நிகழ்வுகள் நடந்தன.

அதேபோல் புதுச்சேரியில் இதர கடற்கரையோரம் தொடங்கி பல இடங்களில் திறந்த வெளியில் டிஜேயுடன் பார்ட்டி நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி தந்திருந்தது. ஆனால் அங்கு பல இடங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில், "புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நாங்கள் திறந்தவெளி டிஜே பார்டிக்கு பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து பதிவு செய்தோம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட உணவோ, மது வகைகளோ தரவில்லை. குறிப்பிட்ட இடத்தில் அதிகமானோர்களை அனுமதித்தனர்.

இதுதான் உணவு, மது பற்றாக்குறைக்கு காரணம். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிகமானோரை பல தனியாரும் அனுமதித்தது தவறானது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்கவும், பயணிகள் ஏமாறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்றனர்.

சாலையோரம் மது அருந்துவோர் அதிகரிப்பு: குடும்பத்துடன் சுற்றுலா வந்த பலரும் கூறுகையில், " சாலையோரங்களில் மது அருந்துவோரை அதிகளவில் இம்முறை பார்க்க முடிந்தது. அவர்களில் சிலர் பெண்களை சீண்டும் சம்பவங்களும் நடந்தது. போலீஸார் இதை கண்காணிப்பது அவசியம்" என்றனர். புத்தாண்டையொட்டி வான வேடிக்கைகள், பாடல் நிகழ்வுகள் நடந்தன.

பாரடைஸ் தீவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் படகு குழாம் நோணாங்குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு கடற்கரையையொட்டி பாரடைஸ் தீவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த படகு குழாமில் இருந்து தீவுக்கு படகு சவாரி மூலம் சென்று குளித்து மகிழ்வர்.

கடந்த ஆண்டு இங்கு தனியாரால் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. உணவு கிடைக்கவில்லை. பணம் கட்டி டோக்கன் பெற்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் இந்த ஆண்டு நோணாங்குப்பம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x