Published : 25 Oct 2023 04:00 AM
Last Updated : 25 Oct 2023 04:00 AM

வால்பாறையில் 20 ஆபத்தான நீர்நிலைகள்: பட்டியல் வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு, நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுப்பது, குளிப்பது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வால்பாறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடந்த 20-ம் தேதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் அஜாக்கிரதையாக இருப்பதால், பல நேரங்களில் நீர் நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

வால்பாறை, அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர் நிலைகளான கருமலை இறைச்சல் பாறை, கூழாங்கல் ஆறு, சோலையாறு வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடி கூடுதுறை, வெள்ளை மலை சுரங்கப் பாதை, கெஜமுடி சுரங்கப் பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனார் நீர்வீழ்ச்சி, காடம்பாறை அணை, மேல் ஆழியாறு அணை, காடம்பாறை 501 சுரங்கப்பாதை,

சந்தன அணை, சோலையாறு அணையின் முன்பக்க ஆறு, சின்னக்கல்லாறு, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர் வீழ்ச்சி, மானாம் பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப் பட்டுள்ளன. எனவே, இந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம்.

இந்த பகுதிகள் மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும், சுழல்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப் படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x