

திருச்சி: வெள்ளப் பெருக்கு காரணமாக புளியஞ்சோலைக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது புளியஞ்சோலை சுற்றுலாத் தலம். திருச்சி - நாமக்கல் மாவட்ட எல்லையான கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலைக்கு, கொல்லிமலையில் பெய்யும் மழைநீர்தான் ஆதாரம். கடந்த சில நாட்களாக கொல்லிமலை, ஆகாய கங்கை உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழை காரணமாக புளியஞ்சோலைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புளியஞ்சோலைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், கொல்லிமலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம்இரவு முதல் புளியஞ்சோலை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி புளியஞ்சோலை ஆற்றுக்குச் செல்லவும், அங்கு குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வரத்து குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.