சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி தொடங்குவதில் இழுபறி : சுகாதாரத் துறை அமைச்சர் கவனிப்பாரா?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி தொடங்குவதில் இழுபறி  :  சுகாதாரத் துறை அமைச்சர் கவனிப்பாரா?
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சி உள்ளிட்ட பாரா மெடிக்கல் பாடப்பிரிவுகள் தொடங்குவதில் இழுபறி நீடிப்பதால் இன்று ஆய்வுக்கு வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லூரிகள் இல்லை. சிவகங்கை அருகே பூவந்தியில் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பயிற்சி மையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டால், செவிலியர் கல்லூரி மாணவர்கள் மூலம் வார்டுகளில் நோயாளிகளைக் கவனிக்க முடியும். இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியபோதே பிஎஸ்சி (அ) டிப்ளமோ நர்சிங் கல்லூரி தொடங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது. மருத்துவக் கல்லூரி தொடங்கி 9 ஆண்டுகளாகியும் செவிலியர் கல்லூரி இதுவரை தொடங்கப்படவில்லை. தற்போது பாரா மெடிக்கல் படிப்புகளில் ஆய்வக தொழில்நுட்புனர் படிப்பு மட்டுமே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ளது. மற்ற படிப்புகள் தொடங்க இழு பறி நீடித்து வரும்நிலையில் சிவகங்கையில் இன்று ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருந்தபோதிலும், நோயாளிகளைக் கவனிப்பதில் சிரமம் உள்ளது. நர்சிங் கல்லூரி இருந்தால் பயிற்சி மாணவர்கள் உதவியாக இருப்பர்.

மேலும் இதுபோன்ற தொற்று காலங்களில் கூடுதல் உதவியாக இருந்திருக்கும். அதேபோல் 17 வகையான பாரா மெடிக்கல் படிப்புகள் உள்ளன. இதில் ஒன்று மட்டுமே இங்கு உள்ளது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in