

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ கருவியான குரோக் ஆகியவை தொழில்நுட்பக் கோளாறால் முடங்கியுள்ளன.
இந்திய நேரப்படி இரவு 8:30 மணியளவில் எக்ஸ் தளம் மற்றும் குரோக் ஏஐ சேவைகள் முடங்கத் தொடங்கின. இதைப் பதிவிட்ட டவுன்டெக்டர் இணையதளம், அமெரிக்காவில் மட்டும் சுமார் 75,000-க்கும் மேற்பட்டோர் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் சிரமப்பட்டனர். குறிப்பாக, எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முயன்றவர்களுக்கு பதிவுகளும், பின்னூட்டனஙகளும் சரியாக செயல்படவில்லை.
எக்ஸ் தளத்தின் பிரீமியம் பயனர்களுக்கு வழங்கப்படும் குரோக் ஏஐ சேவையும் இந்த முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பயனர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குரோக் பதிலளிக்கவில்லை. ஏற்கனவே இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று எக்ஸ் தளம் ஒரு சிறிய முடக்கத்தைச் சந்தித்த நிலையில், நான்கு நாட்களில் நடைபெறும் இரண்டாவது பெரிய தொழில்நுட்பக் கோளாறு இதுவாகும். பல பயனர்கள் கிளவுட்ஃபிளேர் போன்ற இணைய உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
தற்போது வரை எக்ஸ் நிறுவனம் அல்லது எலான் மஸ்க் தரப்பில் இருந்து இந்த முடக்கம் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இரவு 10 மணிக்குப் பிறகு சேவைகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. பயனர்கள் மீண்டும் தங்கள் ஃபீட்களைப் புதுப்பிக்கவும், பதிவுகளைப் பகிரவும் முடிகிறது. இத்தகைய தொடர்ச்சியான முடக்கங்கள், எக்ஸ் தளத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளைப் பயனர்களிடையே எழுப்பியுள்ளது.
ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் பெண்களின் புகைப்படங்களை அவர்களது அனுமதியின்றி மார்ஃப் செய்வதாக க்ரோக் ஏஐ மீது உலகம் முழுவதும் புகார் எழுந்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இப்படியான தொடர் தொழில்நுட்ப கோளாறுகளும் பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.