

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்தியா ஏஐ உச்சி மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் புதுமை கண்டுபிடிப்பு பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளன. இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி ஏஐ தொழில் நுட்பத்தில் தயாரான பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து சர்வம் என்ற இந்திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ பிரத்யுஷ் குமார் கூறியதாவது: இந்தியா ஏஐ கண்காட்சியில், பிரதமர் மோடி ஒவ்வொரு அரங்கமாக பார்வையிட்டு அங்குள்ள பொருட்கள் குறித்து கேட்டறிந்தது ஊக்குவிப்பதாக இருந்தது. எங்கள் நிறுவன அரங்குக்கு வந்த பிரதமர் மோடியிடம் நாங்கள் உருவாக்கி வரும் மாடல்களை அவருக்குக் காட்டினோம். செயற்கை நுண்ணறிவிற்கு விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லை என்பதைக் காட்ட, ஒரு சாதாரண ஃபீச்சர் போனை அவரிடம் காண்பித்தேன்.
ஒரு ஃபீச்சர் போன் மூலமாகவே, எங்களது மாடல்களை யாராலும் அழைத்து எந்தக் கேள்வியையும் கேட்க முடியும். அவர் இதைக்கேட்ட பிறகு, ‘இது குஜராத்தி மொழியில் பேசுமா?' என்று கேட்டார். நாங்கள் அவருக்கு ஒரு குஜராத்தி உதாரணத்தைக் காட்டினோம். அது மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது.
ஏஐ தொழில் நுட்பத்தில் செயல்படும் கண்ணாடியை அவர் அணிந்து பார்த்தார். இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலம் தயாரித்த கண்ணாடி. புதுமை கண்டுபிடிப்புகளை மேம்படுத்த, நமது தொழில்நுட்பம் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்க வேண்டும்.
பின்னர் அவர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் நமது புதிய தயாரிப்புகளை உருவாக்கினால் அது சிறந்ததாக இருக்கும். பொருளாதாரத்தில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, ஏஐ போட்டியில் முன்னணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.