

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ‘இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026' பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில், என்விடியா, கூகுள் மற்றும் ஓபன்ஏஐ உள்ளிட்ட சுமார் 400 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களின் (எஸ்டிபிஐ) தலைமை இயக்குநர் அரவிந்த் குமார், பிடிஐ செய்தியாளரிடம் கூறும்போது, “இந்த கண்காட்சி ஏஐ சூழலமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு பாலமாக அமையும். இந்திய கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப் படுத்த இது ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.
பிரதமர் மோடி அடுத்த ஏஐ உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்தப்போவதாக அறிவித்த உடனேயே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசு அமைச்சகங்களும் இதில் பங்கேற்கின்றன” என்றார்.
இந்த கண்காட்சியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைப்பதற்கான அமர்வுகள் நடைபெறும். ஏஐ மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க சுமார் 700 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த உச்சி மாநாடு, மக்கள், பூமி மற்றும் வளர்ச்சி ஆகிய 3 முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.