

சென்னை: தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, கொரட்டூரில் கோயில் நிலத்தில் 2036 வீடுகள் கட்டி 10 ஆயிரம் பேரை ஏமாற்றி ரூ.2,500 கோடி மதிப்பில் மிகப் பெரிய மோசடி நடந்திருப்பதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் இது கோயில் நிலம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் கட்டுமான நிறுவனம் திட்டமிட்ட ரீதியில் மக்களை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.
கோயில் நிலம் என்பதை மறைத்து, மக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய அந்நிறுவனத்தின் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்.
மேலும், நிலப்பத்திரங்களை ஆய்வு செய்யாமல் வங்கிகள் எவ்வாறு மக்களுக்கு கடன் கொடுத்தன என்பதை தொடர்புடைய வங்கிகள் விளக்குவதோடு, தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இதன் பின்னணியில் யார் உள்ளனர். இந்து அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்பதை யெல்லாம் விசாரித்து, இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வாய் திறப்பாரா? நடவடிக்கை எடுப்பாரா?