Last Updated : 07 Oct, 2016 08:23 AM

 

Published : 07 Oct 2016 08:23 AM
Last Updated : 07 Oct 2016 08:23 AM

விரலில் தொடங்கும் சைபர் பாதுகாப்பு!

நாம் வாழும் உலகம் இத்தனை ஆபத்தானதாக இருக்கிறதா? நம்மைச் சுற்றி இவ்வளவு அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா? அப்பாவியான நம்மைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த எப்போதும், எங்கோ யாரோ காத்திருக்கிறாரா?

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற தேசிய சைபர் பாதுகாப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களைக் கேட்டிருந்தால் உங்கள் மனதிலும் இத்தகைய கேள்விகள் நிச்சயம் தோன்றியிருக்கும்.

ஆனால் இந்த மாநாடு மிரட்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. இத்தகைய தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ஏற்கெனவே உண்டான பாதிப்பிலிருந்து மீட்கும் வகையிலும் வல்லவனுக்கு வல்லனவாக வல்லுந‌ர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், அதற்காக அவர்கள் கையாளும் வழிகளையும், உத்திகளையும் அறிந்து பிரமிக்கவும் முடிந்தது.

அதோடு எதிர்காலத்தில் இந்த ஆபத்துகள் இன்னும் தீவிரமாகாமல் தடுப்பதும், தற்காத்து கொள்வதும் நம் கைகளில்தான் இருக்கிறது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

எதற்காக இந்த மாநாடு?

சைபர் வெளி என்று சொல்லப்படும் இணையம் சார்ந்த பரப்பில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் பாதுகாப்பின் அவசியத்தையும், அதற்கான வழிகளையும் வலியுறுத்தும் வகையில் ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ எனும் அமைப்பு, மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வாரம் இந்த மாநாட்டை நடத்தியது. சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள், வர்த்தக நிறுவனப் பிரதிநிதிகள் என சைபர் பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் எடுத்து வைத்தனர்.

இணைய மோசடிகள் பற்றியும், ஹேக்கர்களின் தாக்குதல் பற்றியும் அங்கொன்றும் இன்கொன்றுமாக நாம் கேள்விபட்டிருந்தாலும், சைபர் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் எத்தனை பரவலாகவும், தீவிரமாகவும் இருக்கின்றன என்பதை நிலையை இந்த வல்லுநர்கள் புரிய வைத்தனர்.

வல்லுநர்களின் பேச்சு பலவிதத் தலைப்புகளில் அமைந்திருந்தாலும், சைபர் பாதுகாப்பு என்பது தேசிய நோக்கில், தனிப்பட்ட அளவில், நிறுவன மட்டத்தில் என மூன்று கட்டங்களாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்பதையும், மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதையும் உணர்த்தியது.

இந்த மாநாட்டில் ‘சைபர் மிஷன் இந்தியா’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாநாடு அறிமுக உரையில், நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அமர் பிரசாத் ரெட்டி, நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த அமைப்புச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சைபர் அச்சுறுத்தல்கள்

தொடக்க விழாவுக்குப் பிறகு எம்.வி.பி எண்டர்பிரைஸ் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த மனு ஜக்காரியா பேசினார். உலகம் முழுவதும் நடைபெற்ற முக்கிய சைபர் மோசடிகளைப் பட்டியலிட்டவர், அவற்றில் இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய, பாதுகாப்பு வல்லுநர்கள் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். இருப்பிடம் பற்றியத் தகவலை சீனாவுக்கு அனுப்பி வைக்கும் சிப்கள், ட்ரோன்கள் மூலம் செயல்படும் துப்பாக்கிகள், கார்கள் மூதல் டீரிம்லைனர் விமானங்கள் வரை எல்லாமே ‘ஹேக்’ செய்யப்படுவதற்கான அபாயம் பற்றி எல்லாம் கோடிட்டுக் காட்டினார். சீன ஹேக்கர் குழு ஒன்று, வியட்நாம் விமான நிலையங்களின் கம்ப்யூட்டர் அமைப்புகள் உள்ளே நுழந்து அதன் ஒலிபெருக்கி அமைப்பு உள்ளிட்டவற்றைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட தகவலையும் சுட்டிக்காட்டினார்.

“சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல, அதில் மனிதர்களும் இருக்கின்றனர், அந்தச் சங்கிலிதான் பல இடங்களில் பலவீனமாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கிக்கொண்டு பென் டிரைவை கம்ப்யூட்டரில் பொருத்த முற்பட்டால் என்ன ஆகும் என மிரள வைத்தார். பாதுகாப்பில் பயனாளிகளுக்கும் முக்கியப் பங்கு இருப்பதைக் குறிப்பிட்டவர், மற்ற நாடுகள் எல்லாம் சைபர் பாதுகாப்பு தொடர்பாக நீண்ட கால நோக்கில் திட்டங்கள் தீட்டும்போது நம்மிடம் நீண்ட காலத் திட்டம் இல்லை என்றார்.

அடுத்ததாகப் பேசிய ‘டீப் ஐடென்டிட்டி’ நிறுவனத்தின் செக்யூரிட்டி ஹெட், பெனில்டஸ் நடார், ஒரு காலத்தில் வெறும் ‘ஃபயர்வால்’ பாதுகாப்பு இருந்தால் போதும் என்ற நிலைமாறி இன்று நிறுவனங்கள் தரவுகளைப் பாதுகாக்கத் தடுமாறும் நிலை உண்டாகியிருக்கிறது என்றார். நவீன சாதனங்களைக் கொண்ட சிக்கலான பாதுகாப்பு அமைப்பு மட்டுமே தற்காப்பை உறுதி செய்துவிடாது என்றும், தாக்குதல் ஏற்பட்டால் அதைத் தடுப்பதில் காட்டும் கவனத்தை, தாக்குதல்கள் நடைபெறுவதை முன்பே கண்டறியும் முயற்சியிலும் காட்ட வேண்டும் என்றார்.

“இமெயில் மற்றும் சமூக ஊடகங்கள் வழியே விஷமிகள் விரிக்கும் வலையில் நிறுவன ஊழியர்கள் தங்களை அறியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. நவீன பாதுகாப்பு அமைப்புகளை அளிப்பதைவிட, நிறுவன வர்ததகச் சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற பாதுகாப்பு அம்சங்களை அளிக்க வேண்டும்” என ஆலோசனை கூறியவர், தற்காப்பும் பாதுகாப்பும் மட்டும் அல்ல, சைபர் தாக்குதல் நடைபெற்றால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றார்.

தேவை தயார் நிலை

முன்னாள் மத்திய தலைமை சைபர் பாதுகாப்பு அதிகாரியான நரேஷ் சவுத்ரி, சைபர் யுத்தம் பற்றியும், சைபர் பயங்கரவாதம் பற்றியும் குறிப்பிட்டார். ஆய்வு அமைப்புகளின் வசதிகள், முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள், மின்சக்தி மையங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட பலவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார். “மக்கள் பலர் ‘என்னிடம்தான் எந்த ரகசியமும் இல்லையே, என் கம்ப்யூட்டரை யார் தாக்கப்போகிறார்கள்’ என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

யாருடைய கம்ப்யூட்டர் வேண்டுமானாலும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு ‘ஜோம்பி’ படையின் அங்கமாக்கப்படலாம்” என எச்சரித்தார். சீனா சைபர் உளவை, ஒரு உத்தியாகக் கடைப்பிடித்து வருவது குறித்தும் பேசியவர், நிறுவனங்களுக்கும் சைபர் தாக்குதல் மிகப் பெரிய அச்சுறுத்தல், விஷமிகள் ஊழியர் போல ஊடுருவலாம் என திடுக்கிட வைத்தார். எல்லோரையும் மதியுங்கள், ஆனால் எல்லோரையும் சந்தேகியுங்கள் என்பதே இக்கால நியதி என்றார்.

இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான அருண் குமார் சஹானி, மாநாட்டின் இரண்டாம் நாளில் பேசும் போது, தேசிய நோக்கில் சைபர் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அணுகுமுறைகள் குறித்துச் சிந்திக்க வைத்தார். “தைவான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘சைபர் கமாண்டோ’ உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியவர், நம்முடைய ராணுவ அமைப்பிலும் மாற்றம் தேவை. சைபர் வீர்ர்கள் சீருடை அணிந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சைபர் பாதுகாப்பில் அரசு மற்றும் தனியார் கூட்டு அதிகரிக்க வேண்டும்” என்றார்.

சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் உத்தி, சைபர் தாக்குதலை நடத்தும் ஆற்றலையும் உட்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘மேக் இன் இந்தியா’ கொள்கையைப் பொருத்தவரை நாம் பயன்படுத்தும் சாதனங்கள் இந்திய இதயம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய தொழில்நுட்ப இறையாண்மை மிகவும் இன்றியமையாதது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய, ‘டிஜிட்டல் இந்தியா’ முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி ருத்ரமூர்த்தி, இன்றைய குழந்தைகள் எல்லாம் செல்போன் பயன்படுத்துவது இயல்பாகியிருக்கும் நிலையில், சைபர் பாதுகாப்புக் கல்வி என்பது மழலையர் பள்ளியில் இருந்து அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியவர், சைபர் பாதுகாப்பில் ஆர்வத்தை உண்டாக்க தனியே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மீண்டு வரும் ஆற்றல்

சைபர் பாதுகாப்பில் தேவையான மீண்டு வரும் திறனின் முக்கியத்துவம் பற்றி ‘பிரிஸ்டைன் கன்ஸல்டிங்’ நிறுவன இயக்குனர் விட்டல் ராஜ் பேசினார். “சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல; அது மனிதர்கள் தொடர்பானதும்கூட. எல்லா வகையான நவீன தற்காப்புத் தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களிடம் சரியான புரிதல் இல்லை எனில் ஒரு பயனும் இல்லை” எனக் கூறினார்.

சைபர் தாக்குதலால் நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு குறித்து உலகப் பொருளாதார அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதையும் குறிப்பிட்டவர், நிறுவனங்கள் சர்வர் துண்டிப்பு ஒத்திகை போன்றவற்றை நடத்தத் தயாராக வேண்டும் என யோசனை தெரிவித்தார்.

சைபர் பாதுகாப்பிற்கு நாம் ஒவ்வொருமே பொறுப்பு. ‘நாட்டின் சைபர் பாதுகாப்பு நம் ஒவ்வொருவரின் விரல்களில் இருந்து தொடங்குகிறது’ எனும் கருத்தை வலியுறுத்துவதாக இருந்தது இந்த மாநாடு.

தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x