Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

போலியான மைக்ரோசாப்ட் மென்பொருள் விற்பனை: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

சென்னை: கால்சென்டர்கள் நடத்தி, போலியான மைக்ரோசாப்ட் மென்பொருளை விற்பனை செய்தவர்களைப் பிடித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மைக்ரோசாப்ட் மென்பொருளை போலியாகத் தயாரித்து, குறைந்து விலைக்கு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பலர் இதை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

போலியான மென்பொருளை விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கால்சென்டர்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களை சம்மதிக்க வைக்கின்றனர். சில பிபிஓ நிறுவனங்கள்கூட இந்த போலியான மென்பொருளைப் பயன்படுத்தி வருகின்றன.

இவ்வாறு போலியான மென்பொருளை வாங்குபவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் பெரிய அளவில் மோசடி செய்து வருகிறது. மைக்ரோசாப்ட் மென்பொருளை மிகவும் குறைந்த விலைக்குத் தருவதாக கூறி, பயனாளர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்றுக்கொண்டு, வைரஸ் லிங்குடன் கூடிய போலி மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். பின்னர் கிரெடிட் கார்டு தகவல்களைப் பெற்றும், அவர்களின் கணினியில் உள்ள தகவல்களை பெற்றும் மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் புகார் செய்தது. இதையடுத்து, நாடு முழுவதும் காவல் துறையினர் மைக்ரோசாப்ட் பெயரில் போலியான மென்பொருளை விற்பனை செய்தவர்கள் மற்றும் கால்சென்டர் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேபோல, தமிழக சிபிசிஐடியின் சைபர் க்ரைம் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலியான மென்பொருள் விற்பவர்கள், கால்சென்டர் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைரஸ் லிங்குடன் கூடிய போலி மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். பின்னர் கிரெடிட் கார்டு தகவல், கணினியில் உள்ள தகவல்களை பெற்று மோசடி செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x