

சேலம் / நாமக்கல்: கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கூலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை எம்.பி.க்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், மலையரசன் தொடங்கிவைத்தனர். முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, 460 காளைகள் களமிறங்கின. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.
தொடர்ந்து, காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், குக்கர், வெள்ளிக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியர் தமிழ்மணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அரங்க பிரகாசம் மற்றும் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். எஸ்.பி. கவுதம் கோயல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எருமப்பட்டியில்… நாமக்கல் அடுத்த எருமப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 542 காளைகள் களமிறக்கப்பட்டன. எம்.பி. ராஜேஸ்குமார் போட்டியை தொடங்கிவைத்தார். 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தாவிப் பிடித்து அடக்க முற்பட்டனர். எனினும், வீரர்களின் பிடியில் சிக்காமல் காளைகள் லாவகமாக தப்பின. சில காளைகளை வீரர்களால் பிடிக்க இயலவில்லை. எனினும், பல காளைகளின் திமில்களைப் பிடித்து மாடுபிடி வீரர்கள் வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்றவர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.