

உயிரிழப்பு சம்பவம் நடை பெற்ற சரளைப்பட்டி கல் குவாரி.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சரளைபட்டியில் உள்ள ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். நத்தம் அருகே சரளைப்பட்டியில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது.
சரளைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (25). தாய், தந்தை இல்லாமல் உறவினர் பராமரிப்பில் வசித்து வந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குவாரி பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். வாய்பேச முடியாத நிலையிலும் அடிக்கடி குவாரி பகுதிக்குச் சென்று வடமாநிலத் தொழிலாளர்களுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கருப்பசாமியை கடந்த 10 நாட்களாக காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை குவாரியில் சுமார் 10 அடி பள்ளத்தில் கருப்பசாமி உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பசாமியின் உறவினர்கள் குவாரியை முற்றுகையிட்டனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் மற்றும் போலீஸார் கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நத்தம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
வலியுறுத்தல்
இதனிடையே இந்த உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரி ஒன்றில், இளைஞர் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கெனவே, தனக்கு சொந்தமான குவாரியில் சட்டவிரோத நடவடிக்கை இருப்பதாக வந்த குற்றச்சாட்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் கேமராமேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, தனது ஆளுங்கட்சி பலத்தால் மறைக்க முயன்றவர்தான் இந்த பழனியாண்டி.
மறுபடியும் அவர் மகனுக்கு சொந்தமான குவாரியில் சடலம் கிடைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இது குறித்து சட்டப்பூர்வமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: கல்குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டாரா. அதன் பின்னணியில் வேறு சதித்திட்டங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.