

விக்னேஷ்
திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தவெக கூட்டத்துக்கு சென்ற தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, விபத்தில் சிக்கி காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், திருச்சிக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து காரில் செங்கிப்பட்டி புறப்பட்டார்.
அப்போது, திருச்சி தேசிய கல்லூரியில் பி.காம்., 3-ம் ஆண்டு படித்து வந்த மேலகல்கண்டார்கோட்டை மகாலட்சுமி நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் விக்னேஷ்(19), தனது நண்பர் ஹாரூனுடன் இருசக்கர வாகனத்தில் விஜய் சென்ற காரை பின்தொடர்ந்தார்.
அப்போது விஜய்யின் காருக்கு அருகில் செல்ல முயன்றபோது, அவர்களது இருசக்கர வாகனம் வளம்பக்குடி என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதியது.
அதில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஹாரூன் இருவரும் நிலைதடுமாறி சாலையில் சென்ற மற்ற இருசக்கர வாகனங்களின் மீது விழுந்தனர். இதன் காரணமாக அடுத்தடுத்த வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
இந்தச் சம்பவத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே இந்த விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற ஹாரூன் வீடு திரும்பினார். இந்நிலையில், கடந்த 20 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ், நினைவு திரும்பாமலேயே நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போாலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.