

சென்னை: இளம் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு பகுதியில் 31 வயது பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஏற்கெனவே கணவரை விவாகரத்து செய்துள்ள இவருக்கு, சவுதி அரேபியாவில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் பவுஞ்சிப்பட்டைச் அமீர்சுகேல் (28) என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை வந்தபோது அமீர்சுகேலின் செல்போனை அந்த பெண் பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் பேசுவதை அந்த பெண் நிறுத்தியுள்ளார்.
ஆனாலும், அமீர்சுகேல் தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன், இருவரும் பழகியபோது எடுத்த நெருக்கமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
மேலும், இடைப்பட்ட காலத்தில் அந்த பெண்ணுக்கு 2-வது திருமணம் நடைபெற்றது தெரிந்திருந்தும், தன்னுடன் வருமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 24-ம் தேதி அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, அமீர்சுகேல் கைது செய்யப்பட்டார்.