

மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழ் அறிஞர்கள்.
நாகர்கோவில்: திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வைகாசி 1-ம் தேதி, மதுரையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் கன்னியாகுமரி அருகே லீபுரத்தில் திருக்குறள் விழா நடைபெற்றது. சிறுவர், சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.தொடர்ந்து, நேற்று காலை தமிழறிஞர்கள் தனிப்படகில் சென்று, திருவள்ளுவர் சிலையின்பாதத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். குறளகம் நிறுவனர் தமிழ்குழவி தலைமை வகித்தார். உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை நிர்வாகி திருவள்ளுவன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, பெங்களூரு தாய்மொழி கூட்டமைப்பு தலைவர் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் திருக்குறள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
முதலாவது திருக்குறள் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது. 2-வது மாநாடு இங்கிலாந்து, 3-வது மாநாடு ஆஸ்திரேலியா, 4-வதுமாநாடு டெல்லி மற்றும் மைசூரு, 5-வது மாநாடு அமெரிக்கா, 6-வது மாநாடு கம்போடியாவில்நடந்தது. 7-வது மாநாடு பெங்களூருவில் நடைபெறவுள்ளது. அரசியல் சார்பற்ற அமைப்பாக, 65 ஆண்டுகளாக திருவள்ளுவர் சங்கம் கர்நாடகாவில் இயங்கி வருகிறது.
தற்போது, தமிழகத்தில் இருக்கும் பல்வேறு திருக்குறள் அமைப்புகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். திருக்குறள் ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.