

மதுரை மாவட்ட நீதிமன்றத் தில் ஆஜரான நிகிதா.
மதுரை: மடப்புரம் அஜித்குமார் மீது நகை திருட்டுப் புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, நகை திருட்டு புகாரை முடிக்க ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.
மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கை முடிக்க முடிவு செய்திருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, செய்யாத குற்றத்துக்கு ஒருவரை போலீஸார் அடித்துக் கொலை செய்துள்ளனர். போலீஸாருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை சிறையில் இருக்கட்டும் என்றார்.
இந்நிலையில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று நிகிதா ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி அசன் முகமது முன்பு நேற்று நிகிதா ஆஜரானார். அவரிடம் உங்கள் புகாரை முடித்து வைக்க சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என நிகிதாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை, எனது புகாரின் பேரில் பதிவு செய்த வழக்கை முடித்து விடலாம் என்றார். இதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
அதன்பிறகு நிகிதா செய்தியாளர்களிடம் கூறும்போது, மடப்புரம் வழக்கில் என்னைச் சுற்றி எந்த அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் யாரும் இல்லை.
என் புகாரில் உண்மை இல்லை என சிபிஐ கூறவில்லை. ஆதாரம் இல்லை என்றுதான் கூறியுள் ளது. நகை திருடப்பட்டது தெரிந்ததும் முதலில் கோயில் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன்.
அதன் பிறகே காவல்துறையில் புகார் அளித்தேன். என் செல்போனை சிபிஐ அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். புகார் அளித்ததும் நான் மடப்புரத்திலிருந்து சென்றுவிட்டேன். அதன் பிறகு நடந்தது, அஜித்குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி எனக்கு தெரியாது என்றார்.