

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல்வைத்து, மாநிலம் முழுவதும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
பணம் கொண்டுசெல்ல வரம்பு இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலா 2,106 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் மே 6-ம் தேதி வரை அமலில் இருக்கும். விதிகளின்படி இந்த காலகட்டத்தில் உரிய ஆவணம் இன்றி, ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல முடியாது. ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேல் பொருட்களை கொண்டு செல்லவும் முடியாது.
ஆனால், சோதனையிட்டு பறிமுதல் செய்ய பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் இல்லை. எனவே, இரு படைகளையும் திரும்பப் பெற்றதை தளர்வாகவே விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கருதுகின்றனர்.