

காதர் மொகிதீன்
சென்னை: “அமைச்சரவையில் சேருமாறு எங்களை அழைப்பது தவெகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதுபற்றி எங்களின் தேசிய தலைமையிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். உயர்மட்டக் குழுவை கூட்டி நாளை காலை 11 மணிக்கு எங்கள் முடிவை அறிவிப்போம்” என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சரவையில் இடம்பெறுமாறு விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், “அமைச்சரவையில் இடம்பெறுமாறு எங்களிடமும் பேசினர். தவெகவுக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவளித்துள்ளோம். நாங்கள் கோரிக்கையும் அவர்களிடம் வைக்கவில்லை, எதையும் கேட்கவும் இல்லை. நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவளித்துள்ளோம்.
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து நாங்கள் இப்போது வரை யோசிக்கவே இல்லை. நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் பங்கேற்க அவர்கள் அழைக்கின்றனர். அமைச்சரவையில் சேருமாறு அழைப்பது தவெகவின் பெருந்தன்மையை காட்டுகிறது.
அரசியல் ரீதியாக முடிவெடுக்க எங்களின் தேசிய தலைமை உள்ளது. அவர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளோம். அதுபோல எங்கள் சமுதாய மக்களிடமும் ஆலோசனைக் கேட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி நாளை காலை 11 மணிக்கு எங்கள் முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.