

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கென்னடி திரையரங்கு ஸ்டாப் வரை அரசுப் பேருந்தில் ரூ.6-ம், தனியார் பேருந்தில் ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் .
கோவை: கோவை மாநகரில் அரசுப் பேருந்துகளை விட, தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள நுகர்வோர் அமைப்பினர், ஆட்சியர் மற்றும் ஆர்.டி.ஓ உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாயிபாபா காலனி ஆகிய இடங்களில் நகரப் பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கு இருந்து பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட அரசு நகரப் பேருந்துகள், 100-க்கும் மேற்பட்ட தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லாத பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தனியார் பேருந்துகளுக்கும் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பேருந்துகள் இந்த குறைந்தபட்ச கட்டண முறை பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, கோவை நுகர்வோர் மையத்தின் தலைவர் பி.வெங்கடேசன் கூறியதாவது: கோவை மாநகரில் இயங்கும் பெரும்பாலான தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து வருகிறது.
குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, ரூ.6, ரூ.7 ஆகிய பயணச்சீட்டுகளை தனியார் பேருந்துகள் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் ரூ.10 பயணச்சீட்டை தனியார் பேருந்துகளில் வழங்குகின்றனர்.
ஒரே வழித்தடத்தில் அரசுப் பேருந்தில் குறைந்த கட்டணமும், தனியார் பேருந்தில் அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. காந்திபுரத்தில் இருந்து காந்திபார்க் அருகேயுள்ள கென்னடி தியேட்டர் நிறுத்தத்துக்கு அரசுப் பேருந்தில் ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தனியார் பேருந்தில் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. பேரூர் - சிட்ரா 2-ம் எண் வழித்தட பேருந்துகளிலும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து துறையினர் இதை கண்டறிந்து அபராதம் விதித்தால், பேருந்து நடத்துநர்கள் அபராதத் தொகையை செலுத்திவிட்டு மீண்டும் அதிக கட்டணத்தை தான் வசூலிக்கின்றனர்.
எனவே, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் வழித்தட பர்மிட்டை ரத்து செய்ய வேண்டும். பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும். வழித்தட விவர சார்ட், கட்டண சார்ட் விவரம் வைக்காத தனியார் பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக கோவை சரக வட்டாரப் போக்குவரத்து அலுவலக இணை ஆணையர் அழகரசு கூறும்போது, ‘‘தனியார் பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால், ஆய்வாளர்கள் மூலம் கள ஆய்வு செய்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்பேருந்துகள் ஒரே தவறை திரும்ப செய்தால், அவர்களது பர்மிட் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.