

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (மார்ச் 29) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (மார்ச் 29) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 30, 31, ஏப்.1 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.2-ல் மேற்கண்ட பகுதிகளுடன் டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். 3-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (மார்ச் 29) அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 79 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.