

சென்னை: ‘‘கூட்டாட்சியியலை நிலைநிறுத்தவும் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம்’’ என்று அரசியலமைப்புச் சட்ட தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 76-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியமைப்புச் சட்ட முகப்புரையை படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் பள்ளி, கல்லூரிகளில் இதுதொடர்பாக பேச்சு, கட்டுரைப் போட்டிகளை நடத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருந்ததாவது: இந்தியா என்பது ஒரு பண்பாட்டுக்கோ ஒரு கருத்தியலுக்கோ மட்டுமானதல்ல, அதன் மக்கள் அனைவருக்குமானது. அம்பேத்கரின் இந்த பரந்த பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராகப் போராடும் நமது மனஉறுதியை இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில் மீண்டும் உறுதி கூறுகிறோம்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டாட்சியியலை நிலை நிறுத்தவும் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் மேற்கொள்வோம். நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து நமது குடியரசைக் காப்பதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.