

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாலும், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் 113.67 அடியாக சரிந்ததுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படும். அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,824 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,881 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 9,500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 114.15 அடியிலிருந்து 113.67அடியாகவும், நீர் இருப்பு 84.44 டிஎம்சியிலிருந்து 83.73 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதாலும், நீர்மட்டம் சரிந்து வருவதாலும் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் கலைக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 15-ம் தேதி காலை விநாடிக்கு 4,000 கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று முன்தினம் காலை 3,000 கனஅடியாக குறைந்தது. நேற்று காலை நீர்வரத்து 3,000 கனஅடியாகவே நீடித்தது.